Tuesday 20 April 2010

மே தினம் 2010-அமெரிக்காவின் உலகமேலாதிக்கத்தை எதிர்ப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
உலக முதலாளித்துவப் பொது நெருக்கடியானது தீர்வுகாணமுடியாமல் நீடித்து வருகிறது. இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, ஏகாதிபத்தியவாதிகளையும், அவர்களின் தாசர்களையும் தூக்கியெறிந்து உலகப் பாட்டாளிகளும், ஒடுக்கப்பட்ட தேசங்களும் சோசலிசப் புரட்சிக்கும் தேசிய விடுதலைப் புரட்சிக்கும் போர்ப்பரணி பாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளே இம் மே நாள்.

அமெரிக்காவின் உலகமேலாதிக்கம்:
அமெரிக்க ஏகாதிபத்தியம் தமது உலகமேலாதிக்கத்திற்காக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது தொடுத்துள்ள ஆக்கிரமிப்புப் போர்களை வெறித்தனமாகத் தொடர்கிறது. யுத்தவெறியன் ஜார்ஜ் புஷ்ஷிற்கு மாற்றாக உலக சமாதானம் பேசிய வெண்புறா ஒபாமாவின் ஆட்சி ஆப்கானிஸ்தானுக்கு 30,000 துருப்புக்களை கூடுதலாக அனுப்பி ஒரு கொடூரமான யுத்தத்தை தொடர்கிறது. ஈரான் மீது பொருளாதாரத்தடை விதித்து அந்நாட்டை முற்றுகையிடுவது; ஹைத்தி உள்ளிட்ட ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் நேரடியாக தலையிடுவது என அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்புப் போர்களைத் தொடர்கிறது.
2007ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்காவால் மீளமுடியவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவத் தளபாடங்களை உற்பத்தி செய்து விற்பதன் மூலமும், ஆயுதப் போட்டியை உருவாக்குவதன் மூலமும் தமது நாட்டில் காப்புக் கொள்கைகளை கடைப்பிடிப்பதன் மூலமும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு முயற்சி செய்கிறது. மேலும் கச்சாப் பொருட்களை சூறையாடவும் மூலதன ஏற்றுமதி மற்றும் மலிவான கூலி உழைப்பைக் கொள்ளையடிப்பதற்காக இந்தியா போன்ற நாடுகளின் மீது இருதரப்பு உடன்படிக்கை மூலம் புதியகாலனி ஆதிக்கத்தை திணித்துவருகிறது.
புதிய காலனியத்திற்கு சேவை செய்யும் மன்மோகன் கும்பல்:
மத்தியில் ஆளும் மன்மோகன் கும்பல், அமெரிக்க-இந்திய உறவுகளில் ஒரு ‘புதிய சகாப்தம்’ படைக்கப் போகிறோம் என்று கூறி, நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “புதிய காலனி”யாக மாற்றி வருகிறது.

கடந்த 2005ஆம் ஆண்டு மன்மோகன் கும்பல் அமெரிக்காவுடன் இராணுவ, அணுசக்தி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான இருதரப்பு உடன்படிக்கைகளை நாடாளுமன்றத்தின் அனுமதி இன்றி செய்துகொண்டது. இதன் மூலம் நாட்டின் அரைகுறை சுதந்திரத்தையும் ஒழித்து, நாட்டை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றும் துரோகச்செயலை, மான வெட்கமின்றி செயல்படுத்துகிறது.
மன்மோகன்-சோனியா கும்பல் தனிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறை ஆட்சி அமைத்தவுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதில் கட்டுப்பாடற்று கடிவாளம் இல்லாத குதிரை போல் செயல்பட்டுவருகிறது. அமெரிக்காவிடமிருந்து பெறுகின்ற தளபாடங்களின் பயன்பாடுகளை கண்காணிப்பதற்காக இருநாடுகளைச் சார்ந்த நிபுணர்குழுவை உருவாக்குவது; போர் ஆயுதங்களையும் மற்றும் ரூ.50,000 கோடிக்கான 126 போர்விமானங்களையும் அமெரிக்காவிடமே வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம்; அமெரிக்கா எடுத்துள்ள ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மீதான போர்த்தந்திரத்திற்கு இந்தியாவை இணங்கச் செய்வது; அமெரிக்க கம்பெனிகள் இந்தியாவில் அணுஉலை அமைக்கும் போது அதில் விபத்து ஏற்பட்டால் அமெரிக்க கம்பனிகள் பொறுப்பேற்பதிலிருந்து விலக்கு அளிப்பது, குறைந்த இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்து சட்டம் இயற்றுதல் போன்ற அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு மன்மோகன் கும்பல் பணிந்து போகிறது. அமெரிக்காவின் ஈராக் மற்றும் ஆப்கான் மீதான ஆக்கிரமிப்புப் போர்களுக்கு துணைபோகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மன்மோகனை உலகின் தலைசிறந்த “இராஜதந்திரி” என்று பாராட்டுவதன் மர்மம் என்ன? இந்தியாவை அமெரிக்காவின் ஒரு அடியாளாக மாற்றியமைக்கும் துரோகத்திற்கு அளிக்கும் பரிசுதான் இந்தப் பட்டமும், பாராட்டும்.
அனைத்துத் துறைகளிலும் அமெரிக்காவின் ஆதிக்கம்:
மன்மோகன் கும்பல் பொதுத்துறை-தனியார் பங்கேற்பு (Public Private Participation) எனும் பேரில் நாட்டின் அனைத்து வாழ்வுத்துறைகளிலும் அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு திறந்துவிடுகிறது. அமெரிக்காவே நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசுடமையாக்குதல், அரசின் கட்டுப்பாடுகளை அதிகரித்து வரும்போது, மன்மோகன் கும்பலோ அனைத்துத் துறைகளையும் அன்னிய மூலதனத்திற்கு திறந்துவிடுகிறது.
நவரத்தனா என்றழைக்கப்படும் இந்திய எஃகு குழுமம், ஆயில் இந்தியா, இயற்கை எரிவாயு நிறுவனம், நிலக்கரி சுரங்கங்கள் போன்ற இலாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை ரூ.40,000 கோடிக்கு விற்றுவிடத் தீர்மானித்துவிட்டது. அண்மையில் எஃகு நிறுவனத்தின் பங்குகள் ரூ.16,000 கோடிக்கு விற்க மத்திய மந்திரிசபை முடிவெடுத்துள்ளது.
மேலும் ஆயுள் காப்பீடு, வங்கிகள் போன்ற நிதித்துறைகளில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளில் திவாலாகிப் போன நிதிநிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. பன்னாட்டு வங்கிகளும், டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ் போன்ற உள்நாட்டுத் தரகுமுதலாளிகளும் வங்கித் துறையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் முழுவதையும் அமெரிக்க நிதிமூலதனக் கும்பலின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறது.
இவ்வாறு மன்மோகன் கும்பல் தொழிற்துறை மற்றும் நிதித்துறைகளை அன்னிய நிதிமூலதனக் கும்பலின் ஆதிக்கத்திற்கு உட்படுத்திவிட்டு அவர்களின் இலாபத்தை பன்மடங்கு பெருக்குவதற்கு, தொழிலாளிவர்க்கத்தின் மீது ஒரு கொடியத் தாக்குதலைத் துவங்கிவிட்டது. பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்களை வேலையிலிருந்து விரட்டியடிப்பது, ஒப்பந்த முறைகள் மற்றும் அவுட்சோர்சிங் முறைகளை பரவலாக்குவது, 8 மணி நேர வேலைநாளை 12 மணி நேர வேலை நாளாக உயர்த்துவது என்று முடிவு செய்துள்ளது. தொழிலாளர்களுக்கு இதுநாள்வரை இருந்துவந்த அரைகுறையான தொழிற்சங்க உரிமைகளும் பறிக்கப்பட்டு கொத்தடிமைகளாக மாற்றப்படுகின்றனர்.
வேளாண்மைத் துறையில் அமெரிக்காவின் ஆதிக்கம்:
மன்மோகன் கும்பல் “முடிவில்லா பசுமைப் புரட்சி” எனும் பேரில் இந்திய வேளாண் துறையை அமெரிக்காவின் பன்னாட்டு வேளாண் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு திறந்துவிட்டுள்ளது. அண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் வேளாண் துறையில் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை கள்ளத் தனமாக ஒப்புதல் அளித்துள்ளது.
வேளாண்மையில் இலாபமீட்டாத நிலங்களை அமெரிக்க கம்பெனிகளிடம் ஒப்படைப்பது; மரபணு மாற்று மற்றும் வேளாண் ஆராய்ச்சியில் மான்சாண்டோ கார்கில் போன்ற அமெரிக்கக் கம்பெனிகளை அனுமதிப்பது; இதை எதிர்த்த மக்கள் இயக்கத்தை ஒடுக்க கடுமையான சட்டம் இயற்றுவது என அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கூறுகிறது.
இந்திய அரசு கடந்த 60 ஆண்டுகளாக நிலச் சீர்திருத்தம் செய்ய மறுத்து அரைநிலவுடமையை பாதுகாத்துவருகிறது. தற்போது இந்திய அரசு நில உச்சவரம்பு சட்டங்களையும் மீறி பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை அமெரிக்க பன்னாட்டு வேளாண் கம்பெனிகளும்; உள்நாட்டுத் தரகுமுதலாளித்துவக் கும்பல்களும் குவித்துக்கொள்ள துரோக ஒப்பந்தங்களை செய்து வருகிறது.
ஏற்கனவே இந்திய அரசு வேளாண் துறையில் புதிய தாராளக் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலமும்; தொழில் மயமாக்கம் என்ற பெயரில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் பெயரிலும் லட்சக் கணக்கான ஹெக்டேர் விளைநிலங்களை விவசாயிகளை விரட்டியடித்துவிட்டு கைப்பற்றியுள்ளனர். 2005ஆம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு 300க்கும் மேற்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு 1,40,000 ஹெக்டர் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாற்றப்பட்டுள்ளது.
வேளாண் விளை நிலங்கள் அமெரிக்க வேளாண் கார்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதோடு, மரபணு மாற்று விதைகள் மற்றும் வேளாண் ஆராய்ச்சியையும் அவைகளிடம் ஒப்படைக்கிறது. இதன் மூலம் மரபணுமாற்று மலட்டு விதைகளை உற்பத்தி செய்வதோடு, அதை இங்கேயே பயிர் செய்து இந்தியாவில் இத்தகைய வேளாண் பொருட்களை விற்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மரபணு மாற்று விதைகளை எதிர்த்து விவசாயிகளும், மக்களும், போராடுவதை ஒடுக்குவதற்கு மன்மோகன் கும்பல் உயிரி தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம் என்ற ஒரு பாசிச சட்டத்தைக் கொண்டுவர உள்ளது. இச்சட்டத்தின்படி சரியான ஆதாரம் அல்லது விஞ்ஞான ஆய்வின்படி அல்லாமல் மரபணு மாற்று விதைகள் போன்ற புதிய தொழில்நுட்பத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை சிறைத் தண்டனையும்; ரூ.2 இலட்சம் அபராதமும் விதிக்கப்படும். தகவலறியும் சட்டப்படி மரபணுமாற்ற ஆராய்ச்சி அனுமதி பற்றிய உண்மைகளை அறிவதற்கும் இச்சட்டம் தடைவிதிக்கிறது. இவ்வாறு மன்மோகன் கும்பல் அடக்குமுறை சட்டத்தின் மூலம் மரபுசார் விவசாயத்தையும், சுயசார்பு விவசாயத்தையும் அழித்து அமெரிக்காவின் மான்சாண்டோ, கார்கில் கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு சேவை செய்கிறது.
இத்துடன் இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில், வேளாண்துறைக் கடன் ஒதுக்கீட்டை அதிகரித்து ரூ.3.75 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளதாக மன்மோகன் கும்பல் விவசாயிகளின் நண்பனைப் போல நடிக்கிறது. ஆனால் இந்த கடன் யாருக்கு பயன்படப் போகிறது? விவசாயிகளிடமிருந்து வேளாண் விளைபொருட்களை வாங்கி விற்கும் வேளாண் வணிக நிறுவனங்கள் குளிர்சாதன கிடங்குகள் அமைக்கவும், போக்குவரத்து வசதிகள் மற்றும் ஏற்றுமதிக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கவே இந்தக் கடன் வழங்கப்பட இருக்கிறது. பன்னாட்டு, உள்நாட்டு வேளாண் வணிக நிறுவனங்களான கார்கில், ITC, டாட்டா, கோத்ரஜ், நீல்கிரீஸ் போன்ற கார்பரேட் நிறுவனங்களுக்கே விவசாயக் கடன் வழங்கப்படும். விவசாயிகளுக்கோ கந்துவட்டியும், தற்கொலைகளுமே பரிசாகக் கிடைக்கும்.
மன்மோகன் கும்பல், வேளாண் விளைநிலங்களை மட்டும் பன்னாட்டு, உள்நாட்டு பெரும் முதலாளிகளுக்கு வழங்கவில்லை. காடுகள் மற்றும் மலைப் பகுதியில் வாழுகின்ற பழங்குடி மக்களின் நிலங்களையும் பறித்து பன்னாட்டு, உள்நாட்டு பகாசுரக் கம்பெனிகளிடம் ஒப்படைத்து வருகிறது. தண்டகாரண்யா என்றழைக்கப்படும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மேற்குவங்கம், ஒரிசா, ஆந்திரம், மகாராஷ்டிரா வரை பரந்து விரிந்துள்ள பகுதிகள் பழங்குடி மக்களின் தாயகமாக விளங்கி வருகிறது. தற்போது இப்பகுதி மிட்டல், ஜிண்டால், டாட்டா, எஸ்.ஆர், போஸ்கோ, வேதாந்தா போன்ற கம்பெனிகளின் வேட்டைக் காடாக மாறிவிட்டது. 5 கோடி மலைவாழ் மக்களின் நிலத்தைப் பிடுங்கிக் கொண்டு சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப் பட்டுள்ளனர்.
இவ்வாறு பழங்குடி மக்களின் நிலங்களைக் கைப்பற்றுவதற்கான காரணம் என்ன?
இப்பகுதியில் பூமிக்கடியில் புதைந்து கிடக்கின்ற கனிமவளங்களை கைப்பற்றுவதுதான் உண்மையான காரணம் ஆகும். ஒரிசாவில் மட்டும் உள்ள பாக்சைட்டின் மதிப்பு சுமார் ரூ.200 லட்சம் கோடியாகும்; அத்துடன் சதீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் பகுதியில் கிடைக்கும் தங்கம், வைரம், யுரேனியம் போன்ற 28 வகையான கனிம வளங்களை அளவிடவே முடியாது. மேலும் இப்பிரதேசத்தில் இரும்பு மற்றும் சிமெண்ட் தொழிற்சாலைகள் அமைப்பது, அணைகள், நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் என இப்பிராந்தியம் முழுதும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் மூல வளங்களைக் கைப்பற்ற வெறிபிடித்து அலைகின்றன.
இந்திய அரசோ “காட்டு வேட்டை” எனும் பெயரில் பழங்குடி மக்களின் நிலங்களைப் பறித்து இக் கம்பெனிகளிடம் ஒப்படைக்க அம்மக்களின் மீது ஒரு கொடிய யுத்தத்தை தொடுத்துள்ளது. பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்காகப் போராடும் மாவோயிஸ்டுகளை வன்முறையாளர்களாக சித்தரிக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பது எனும் பெயரில் பழங்குடிமக்களின் மீது அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துள்ளது. சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாற்றப்பட்டுள்ள 5 கோடி பழங்குடி மக்களின் மறுவாழ்வு பற்றி மன்மோகன் கும்பல் வாய்திறக்க மறுக்கிறது. இவ்வாறு மன்மோகன் கும்பல் நாட்டின் அனைத்து வாழ்வுத்துறையையும் அமெரிக்காவிற்கு திறந்துவிட்டு புதியகாலனியத்திற்கு சேவைசெய்கிறது.
சமூக நலத்திட்டங்களுக்கு நிதி குறைப்பு:
இந்திய அரசு நிதிப்பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product-GDP) 3 சதவீதமாகக் குறைப்பது என்று சட்டம் இயற்றியுள்ளது. ஆனால் மன்மோகன் கும்பலோ நிதிப்பற்றாக்குறையை குறைப்பதாகக் கூறிக்கொண்டே, பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு நெருக்கடியிலிருந்து மீட்பது எனும் பெயரில், நிதி நிலை அறிக்கையில் ரூ.5 லட்சம் கோடி வரிச்சலுகைகளை வழங்கியுள்ளது. இவ்வாண்டு நிதி நிலை அறிக்கையில் கம்பெனி வரி உள்ளிட்ட நேரடி வரி விதிப்பில் ரூ.80,000 கோடி ஆளும் வர்க்கங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார நெருக்கடிகளைக் காரணம் காட்டி கலால்வரி, சுங்கவரி குறைப்பு மூலமும்; ஊக்கத்தொகை, நட்ட ஈடுகளை தொடர்வதன் மூலமும் சுமார் 4,91,000 கோடியை மன்மோகன் கும்பல் வாரிவழங்கியுள்ளது.
மறுபுறம் உணவுக்கான மானியத்தை வெட்டுவது, பெட்ரோல் விலைகளை உயர்த்துவது; கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற மக்கள் நலன்களுக்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்து நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது சுமத்துகிறது. கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்றத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டு இவைகளை தனியார்மயமாக்கி பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளிடம் ஒப்படைத்து வணிகமயமாக்கி வருகிறது. மன்மோகன் அரசு உயர்கல்வியில் பன்னாட்டுப் பல்கலைக் கழகங்களை நேரடியாக அனுமதிக்க சட்டம் இயற்ற இருக்கிறது. இதன் விளைவாக ஏழைகளுக்கு உயர்க்கல்வி ஒரு கனவாகக்கூட இருக்கமுடியாது. மேலும் அனைவருக்கும் கல்வி என்ற சட்டத்தை மன்மோகன் அரசு கொண்டுவந்துவிட்டதாக கூறிக்கொள்கிறது. ஆனால் ஆரம்பக் கல்வியில் தனியார் பள்ளிகளை அனுமதித்துவிட்டு, மாவட்ட ஆரம்பக்கல்வி திட்டத்தை உலகவங்கியிடம் ஒப்படைத்துவிட்டு, பள்ளியைவிட்டு இடையில் நின்றுவிடும் (இடைவிலகல்-Dropouts) குழந்தை உழைப்பிற்கு காரணமான அரைநிலவுடைமை முறைகளுக்கு முடிவுகட்டாமல் அனைவருக்கும் கல்வி என்று பேசுவது ஒரு மாபெரும் மோசடியேயாகும். மருத்துவமும், சுகாதாரமும் இதே நிலைமை தான்.
மாநில உரிமை பறிக்கப்படுதல்:
மன்மோகன் கும்பலின் தலைமையிலான மத்திய அரசு நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை எதேச்சதிகாரமான முறையில் செயல்படுத்துகிறது. விவசாயம், கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்ட துறைகளையும் தன்விரும்பம்போல் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கிறது. மாநில அரசுகளின் அரைகுறையான தன்னாட்சி உரிமைகளையும் பறித்து அனைத்து அதிகாரமும் வாஷிங்டனிடம் ஒப்படைக்கிறது. மாநில சுயாட்சி பேசும் கருணாநிதியோ மாநில அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசை எதிர்க்கத் தயாரில்லை. மாறாக கருணாநிதி அரசாங்கமே புதிய காலனியாதிக்கத்திற்கு சேவை செய்வதற்கு போட்டி போடுகிறது. தமிழகத்தை பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றிவருகிறது.
மன்மோகன்-சோனியா கும்பல் தெலுங்கானாப் போராட்டத்திற்கு பிறகு நாடு முழுதும் மொழிவழி மாநிலங்களை பிளவுபடுத்தும் கோரிக்கைகளை பரிசீலிக்க கமிஷன் அமைப்பதாகக் கூறியுள்ளது. இந்திய அரசு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதுடன், மொழிவழி மாநிலங்களை சாதி, மத அடிப்படையில் பிளவுபடுத்துவதன்மூலம் தேசிய இனங்கள் உருவாவதை தடுக்க முயற்சிக்கிறது. மொழிவழி மாநிலங்களை உடைத்து சிறு மாநிலங்கள் உருவாக்குவதன் மூலம் ஏகாதிபத்தியவாதிகள் பொம்மை ஆட்சி உருவாக்குவதற்கு எளிமையான வழியை ஏற்படுத்தியுள்ளது.

சாதி மற்றும் தீண்டாமையை பாதுகாக்கும் மன்மோகன் கும்பல்:
உலகமய தாராளமயக் கொள்கைகள், கிராமப்புறங்களில் வேளாண்மையை சீரழித்து ஓட்டாண்டித்தனத்தை அதிகரிப்பதோடு, அரைநிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளும் சேர்த்துக்கொண்டு ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கிறது. உயர்சாதி ஆதிக்க சக்திகள் திட்டமிட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி ஒடுக்குமுறைகளை தொடுத்து வருகின்றனர். எனவே தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பண்ணை அடிமை முறைகளைத் திணிக்க நடத்தும் ஒடுக்குமுறைகளை எதிர்த்து முறியடிக்க வேண்டும். மேலும் சாதித்தீண்டாமையை ஒழிப்பதற்கு உலகமயக் கொள்கைகளை எதிர்த்தும், ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவ சக்திகளை எதிர்த்து விவசாயப் புரட்சிக்கு அணிதிரள்வது ஒன்றுதான் வழியாகும். மாறாக நிலங்களை பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளிடம் ஒப்படைத்துவிட்டு பஞ்சமி நிலம் மீட்பாலோ, பொதுத்துறை மற்றும் கல்வியைத் தனியார் மயமாக்கிவிட்டு இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று பேசுவதாலோ அல்லது மதம் மாறுவதாலோ சாதித் தீண்டாமைக்கு முடிவுகட்டி சமதர்ம சமுதாயத்தை படைக்க முடியாது.
காங்கிரசும், பாஜகவும் புதிய தாராளமயக் கொள்கைகளை செயல்படுத்தி நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றுவதில் போட்டி போடுகின்றன. இடது, வலது போலிகள் உள்ளிட்ட நாடாளுமன்றவாத அரசியல்கட்சிகள் அனைத்தும் உலகமயக் கொள்கைகளை ஆதரிக்கின்ற கட்சிகளே. மேலும் உலகமய, தாராளமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான களமாக பாராளுமன்றம் பயன்படப் போவதில்லை. மாறாக மக்கள் மன்றம் மட்டுமே இத்தகைய போராட்டக் களதின் மையமாக திகழ்கிறது.
எனவே மன்மோகன் கும்பல் புதிய தாராளக்கொள்கைகளை செயல்படுத்தி நாட்டை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றுவதை எதிர்த்தும்; நெருக்கடிகளின் சுமைகளை மக்கள் மீது திணிப்பதை எதிர்த்தும்; உழவையும், தொழிலையும் பாதுகாக்கும் ஒரு சுயசார்புப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்க கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள இம் மே நாளில் அறைகூவி அழைக்கிறோம்.
* அமெரிக்காவின் உலகமேலாதிக்கத்தை எதிர்ப்போம்!
* அமெரிக்க ஏகாதிபத்தியமே! ஆப்கான், ஈராக்கை விட்டு வெளியேறு!
* புதிய தாராளமயக் கொள்கை எனும் பெயரால் புதிய காலனியத்தைத் திணிக்கும் மன்மோகன் கும்பலை எதிர்த்துப் போராடுவோம்!
* விவசாயத்துறையை - விளைநிலங்கள், ஆராய்ச்சி, வணிகம், கனிவளங்கள் ஆகியவற்றை மான்சாண்டோ, கார்கில் உள்ளிட்ட அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்காதே!
* கனிவளங்கள் மற்றும் மூலவளங்களை பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு பழங்குடி மக்கள் மீதும், மாவோயிஸ்டுகள் மீதும் நடத்தும் பாசிச தாக்குதலை உடனே நிறுத்து!
* பன்னாட்டு, உள்நாட்டு வேளாண் நிறுவனங்களுக்கு - லட்சக்கணக்கான கோடிகள் கடனுதவி! விவசாயிகளுக்கோ - கந்துவட்டிக் கடனும், பட்டினியும், தற்கொலையுமே!
* ஏகாதிபத்திய மரபணுமாற்றத் தொழில்நுட்பத்தைத் திணிப்பதற்கான ஒடுக்குமுறைக் கருப்புச் சட்ட மசோதவைத் திரும்பப் பெறு!
* பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கு ஐந்து லட்சம் கோடி - வரிச்சலுகை!
உணவு, கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கோ - நிதிக்குறைப்பு!
* நாற்பதாயிரம் கோடி பொதுத்துறைப் பங்குகள் - பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளுக்குத் தாரை வார்ப்பு!
தொழிலாளருக்கோ - வேலை நேர அதிகரிப்பு, தொழிற்சங்க உரிமைப் பறிப்பு, கொத்தடிமை முறைத் திணிப்பு!
* அனைத்துத் துறைகளிலும் தமிழக அரசின் அரைகுறைத் தன்னாட்சி உரிமைகளைப் பறிக்கின்ற மத்திய அரசுக்குத் துணைபோகும் கருணாநிதி ஆட்சியை எதிர்ப்போம்!
* நாட்டை புதிய காலனியாக மாற்றுவதையும் தேசிய இனங்களை உடைப்பதையும் எதிர்ப்போம்!
நாட்டின் விடுதலைக்கும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவோம்!
* பஞ்சமி நில மீட்பாலோ, இடஒதுக்கீட்டாலோ, மதமாற்றத்தாலோ சாதி தீண்டாமை ஒழியாது!
* சாதி, தீண்டாமையை ஒழிக்க - மனித உரிமை மறுப்பு, மத உரிமை மறுப்பை எதிர்த்துப் போராடுவோம்!
விவசாயப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
** உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே! ஒன்றுபடுவோம்!
** மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வெல்க!
........ மேதினி போற்றும் மேதினம் வாழ்க!.........................சமரன்: படியுங்கள்! பரப்புங்கள்!!...........