Thursday 30 April 2015

2015 மே நாள் கழகச் சூளுரை!

மே நாள் வாழ்க, மே நாளில் நம் சூளுரைகள்!!



மே நாள் வாழ்க!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி உயிரையும் கொடுத்த தியாகிகளின் நினைவைப் போற்றும் நாளே இம் மே நாள். அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கும், இந்தியாவை அமெரிக்காவின் புதிய காலனியாக மாற்றுவதற்கும் சேவை செய்யும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவதுதான் இம்மேநாளில் இந்திய மக்களின் சர்வதேசிய, தேசிய கடமையாகும்.

சரிந்துவரும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கம்

சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப்பின், தனது தலைமையின் கீழ் ஒற்றைத் துருவ உலக ஒழுங்கமைப்பைக் கட்டியமைக்கும் அமெரிக்காவின் கனவு தகர்ந்துவிட்டது. பயங்கரவாத எதிர்ப்பு என்ற பேரில் தனக்கு அடிபணியாத நாடுகள் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து, பொம்மை ஆட்சிகளை நிறுவுவதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் கிடைக்கும் எண்ணெய் வளத்தின் மீது தமது கட்டுப்பாட்டை நிறுவுவது என்ற அமெரிக்காவின் திட்டம் தோல்வியை தழுவியுள்ளது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்கள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்கவில்லை.

அமெரிக்காவில் 2008ஆம் ஆண்டு வெடித்துக் கிளம்பிய பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. அது உலகம் முழுவதும் பரவி இன்று உலக முதலாளித்துவ நெருக்கடி மீளமுடியாத மந்த நிலையை அடைந்துள்ளது. பிரான்ஸ் 0%, இத்தாலி 0.1%, போர்ச்சுகல் 0.7%, கிரீஸ் 2.5%, என ஐரோப்பிய பொருளாதாரம் சுருங்கிவிட்டது. ஜப்பான் பொருளாதாரம் பல ஆண்டுகளாக மந்த நிலையிலேயே தொடர்கிறது. சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரமும் வீழ்ச்சியைச் சந்திக்கின்றன.

அமெரிக்காவின் பொருளாதாரம் 2.1 சதவீதமாக வீழ்ந்ததுடன் அந்நாட்டின் கடன் 16 டிரில்லியன்களுக்கும் அதிகமாக உயர்ந்து உலகின் மிகப்பெரும் கடன்கார நாடாக மாறியுள்ளது. வீழ்ந்துவரும் பொருளாதார வலிமையை ஈடுகட்ட அமெரிக்கா தனது இராணுவ வலிமையைப் பயன்படுத்துகிறது. ஆனால் அது படுதோல்வியில் முடிந்துள்ளது.

ரஷ்யாவைச் சுற்றிவளைக்கும் அமெரிக்காவின் திட்டத்தை எதிர்த்து இராணூவ ரீதியில் அமெரிக்காவிற்குச் சவாலாக ரஷ்யா உறுதியாக நிற்கிறது என்றால், சீனாவோ பொருளாதார ரீதியில் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்குக் குழிபறிக்கிறது. அமெரிக்காவின் டாலருக்குப் போட்டியாக சீனா தனது “ரென்பின்” நாணயத்தை சர்வதேச நாணயமாக புழக்கத்தில் விடுவது; பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக “பிரிக்ஸ் வங்கியை” உருவாக்குவது; சீனாவின் தலைமையின் கீழ் “ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கியை” (AIIB) உருவாக்குவது ஆகியவற்றின் மூலம் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சவால் விடுகிறது. இவ்வாறு உலகை மறுபங்கீடு செய்வதற்காக அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய அணிக்கும் – ரஷ்ய, சீன ஏகாதிபத்திய அணிக்கும் இடையிலான போட்டி தீவிரமடைகின்றது.

அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சேவைச் செய்யும் மோடி கும்பல்

அமெரிக்க ஏகாதிபத்தியம், சரிந்துவரும் தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு, தனக்குப் போட்டியாக எழுந்துவரும் சீனாவைக் கட்டுப்படுத்தி ஆசியாவில் தனது மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான தனது ஆசிய-பசிபிக் திட்டத்திற்கு மோடி தலைமையிலான இந்திய அரசைப் பணியவைப்பதில் வெற்றி பெற்றுள்ளது. ஆசியாவில் சீனாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இந்தியாவையும் இணைத்துக்கொண்டு அமெரிக்காவின் தலைமையில் ஒரு இராணுவக் கூட்டணி அமைப்பது என்ற அமெரிக்காவின் திட்டத்திற்கு மோடி அரசாங்கம் பணிந்துவிட்டது. அத்துடன் அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்திற்காக நடத்திவரும் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு இந்திய இராணுவத்தை எடுபிடி இராணுவமாக மாற்றியமைக்கும் இராணுவ ஒப்பந்தத்தை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.

மேலும் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவந்ததன் மூலம், இந்தியா தனது வெளியுறவுக் கொள்கைகளை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையையும் ஏற்றுக் கொண்டுவிட்டது. இந்திய ஆளும் வர்க்கங்களின் தென்னாசிய மேலாதிக்க நலன்களிலிருந்து அமெரிக்காவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இதன் மூலம் மோடி ஆட்சி, இந்தியா இதுநாள்வரை கடைப்பிடித்து வந்த கூட்டுசேராக் கொள்கைகளைக் கைவிட்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்கு சேவைச் செய்யும் நாடாக இந்தியாவை மாற்றிவிட்டது. இந்தியாவை அமெரிக்காவின் நாடுபிடிக்கும் கெடுபிடிப் போர் எனும் தேர்க்காலில் பிணைத்துவிட்டது. இது இந்திய மக்களுக்கும் உலக மக்களுக்கும் மோடி கும்பல் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

அமெரிக்காவின் புதியகாலனிய களமாக இந்தியா

மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகள் முன்வைத்த புதிய தாராளக் கொள்கைகளை மூர்க்கத்தனமாக அமல்படுத்திவருகிறது. நாட்டின் பொருளாதாரம் 8 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கும் கீழ் வீழ்ச்சியடைந்ததற்குக் காரணம் மன்மோகன்சிங் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசாங்கத்தின் “கொள்கை முடக்கமே” என்று கூறி அந்நிய மூலதனத்திற்கு இதுவரை இருந்து வந்த கொஞ்சநஞ்சத் தடைகளையும் அகற்றி சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறது. வீழ்ச்சியடைந்துள்ள உற்பத்தித் துறையை மீட்பதற்குக் கட்டமைப்புத் துறையில் 1 டிரில்லியன் டாலர் அந்நிய மூலதனத்தை ஈர்க்க வேண்டும் என்று கூறுகிறது. குறிப்பாக மோடி தனது அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்காவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான முதலாளிகளுக்கு இந்தியாவில் முதலீடு செய்யவருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் எத்தகைய சூழலில் அந்நிய மூலதனத்தை உற்பத்தித் துறையில் ஈர்ப்பது என்று மோடி கூறுகிறார்?

உலக அளவில் பொருளாதாரத்தில் மந்தநிலை தொடர்கிறது. உற்பத்தி வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைவதன் விளைவாக ஊகவாணிபத்தின் மூலம் சொத்துக்களை ஊதிப் பெருக்குவதும் வரலாறு காணாத அளவிற்கு உச்சநிலையை எட்டியுள்ளன. ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை முதலீடுகள் போன்ற ஊகவாணிபத்தின் மூலம் நிதி மூலதனக் கும்பல்களின் சொத்துக்கள் பன்மடங்கு பெருகியுள்ளன. இன்று உலக அளவில் உயர்மட்டத்தில் உள்ள 1 சதவீதத்தினரிடம் ஒட்டுமொத்த செல்வத்தில் 50 சதவீதம் குவிந்துள்ளன. மறுபுறம் உலக அளவில் வேலையின்மை பெருகுதல், ஊதியம் குறைக்கப்படுதல், வறுமை பெருகுதல் போன்ற காரணங்களால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து சந்தை சுருங்கி வருகிறது. இத்தகைய சூழலில் நிதி மூலதனம் உற்பத்தியில் அல்லாமல் ஊகவாணிபத் துறைகளில்தான் பெருமளவில் குவிகின்றன.

அண்மையில் இத்தகைய ஊக முதலீடுகள் என்று அழைக்கப்படும் “ஹாட் மணி” இந்திய பங்கு சந்தைகளிலிருந்து வெளியேறத் துவங்கிவிட்டன. இந்திய பங்குச் சந்தையில் 2014 வரை அந்நிய நிதிநிறுவன முதலீட்டாளர்கள் 22 பில்லியன் டாலர்களை முதலீடு செய்திருந்தனர். ஆனால் இத்தகைய ஊக முதலீடுகள் கடைசி 4 பருவங்களின் போது ரூ 2,140 கோடி அளவுக்கு வெளியேறிவிட்டது. ஏற்றுமதிக்கான சரக்கு உற்பத்தி வீழ்ச்சி, அரசின் வரிவருவாய் குறைந்துபோவது, கடந்தகால வர்த்தக நடவடிக்கைகள் மீது வரிவிதிப்பது போன்றவற்றைக் காரணம் காட்டி “ஹாட் மணி” வெளியேறுகிறது. இத்தகைய ஓடுகாலி மூலதனங்களை நம்பி பயணம் போகிறது மோடி கும்பல். அவர்களுக்கு ஏராளமான சலுகைகளை வாரிவழங்குகிறது.

தொழிலாளர்கள் கொத்தடிமையாக்கப்படுதல்

அந்நிய முதலீடுகளைக் கவர்வதற்காக மலிவான கூலி உழைப்பை வழங்குவதாக மோடி கும்பல் வாக்குறுதி அளிக்கிறது. தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளையெல்லாம் பறித்து அவர்களைக் கொத்தடிமைகளாக மாற்றுகிறது. தொழிற்சாலைச் சட்டம், தொழில் தகராறு சட்டம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சட்டம் ஆகியவற்றில் பா.ஜ.க. ஆளும் இராஜஸ்தான் மாநில அரசாங்கம் திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. அதே சட்டத்திருத்தங்களை மோடி அரசாங்கம் மேற்கொள்வதோடு பிற மாநில அரசுகளையும் செயல்படுத்துமாறு நிர்பந்திக்கிறது. நிரந்தர வேலையைப் பறிப்பது, எட்டுமணி நேர வேலை நேரத்தை ஒழிப்பது, தொழிற்சங்க உரிமைகளைப் பறிப்பது, வேலைப் பாதுகாப்பை ஒழிப்பது ஆகியவை இச்சட்டத்திருத்தங்களின் நோக்கமாக உள்ளன. “அதிகாரிகளின் இராஜ்ஜியத்தை ஒழிப்பது” என்ற பேரில் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி கார்ப்பரேட்டுகளின் “காட்டுத் தர்பாரை” கட்டவிழ்த்துவிடுகிறது.

தொழிலாளர்களின் வைப்புநிதி, தொழிலாளர் மாநில காப்பீட்டு உறுதி, ஓய்வூதிய நிதி போன்ற சமூகப் பாதுக்காப்புத் திட்டங்கள் கைவிடப்படுகின்றன. தொழிலாளர்களின் வைப்பு நிதியை பங்குச் சந்தைச் சூதாட்டத்தில் ஈடுபடுத்துகிறது. குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 1,000 என்பதையும் மோடி அரசாங்கம் கைவிடுகிறது. இவ்வாறு தொழிலாளர்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுகின்றன. ஏற்கனவே இந்தியாவில் 93 சதவீதம் தொழிலாளர்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாக - இந்த உரிமைகள் எதுவும் அற்றாவர்களாக உள்ளனர். இனி அனைத்துத் தொழிலாளர்களும் எந்தவித உரிமைகளுமின்றிக் கொத்தடிமைகளாக மாற்றப்படுவர்.
நிலம் கையகப்படுத்தும் சட்டம்

அன்னிய மூலதனத்திற்கு மலிவான விலையில் நிலங்களையும் மூலப்பொருட்களையும் வழங்குவதற்காகவே மோடி அரசாங்கம், பிரிட்டிஷ் ஆட்சியின் 1894 - நிலம் கையகப்படுத்தும் சட்டத்தையும் விட ஒரு கொடிய சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

1894 சட்டத்தின்படி அரசிற்கோ, அரசிற்கு வேண்டப்பட்டவர்களுக்கோ தேவைப்படும் நிலத்தை விவசாயிகளின் ஒப்புதல் இன்றியே கையகப்படுத்தலாம். 1947க்குப் பிறகும் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தித்தான் இந்திய அரசு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றிவந்தது. 1990களுக்குப் பிறகு கார்ப்பரேட்டுகளின் நலன்களையே பொது நலனாகச் சித்தரித்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தங்க நாற்கரச் சாலைகள், தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் 2004 வரை சுமார் 6 கோடிப் பேர் தங்களுடைய வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்கு எதிராக உ.பி., மே.வங்கம், மகராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் கடுமையான போராட்டங்களை நடத்தினர். தேர்தலில் தோற்றுப் போய்விடுவோம் என்ற பயத்தில்தான் மன்மோகன்சிங் அரசாங்கம் “நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை மற்றும் நியாயமான இழப்பீடு பெரும் உரிமை மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டம், 2013”ஐ கொண்டுவந்து விவசாயிகளுக்கு சில சில்லரைச் சலுகைகளை வழங்கியது.

மோடி அரசாங்கம் அந்தச் சலுகைகளையும் பறித்து கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக புதிய சட்டத்திருத்தத்தை கொண்டுவந்துள்ளது. இச்சட்டத்தின்படி தனியார்துறைத் திட்டங்களுக்கும் கூட விவசாயிகளின் ஒப்புதல் இன்றியே மூன்று போகம் பயிர்சாகுபடி நடக்கும் நிலங்களைக் கையகப்படுத்தலாம்; சமூக தாக்கங்கள் பற்றிய மதிப்பீடுகள் செய்யத் தேவை இல்லை; 5 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலங்களை திருப்பித்தர வேண்டியதில்லை; எல்லாவற்றிற்கும் மேலாக நிலத்தை பறிகொடுத்தவர்கள் நீதிமன்றத்தை அணுகமுடியாது என்பவற்றின் மூலம் விவசாயிகள் மீது ஒரு கொடிய தாக்குதலை நடத்தியுள்ளது.
ஏற்கனவே இந்திய அரசாங்கம் அமல்படுத்திவரும் புதியகாலனிய “கார்ப்பரேட்” விவசாயத்தால் விவசாயம் அழிந்து விவசாயிகள் நிலத்தை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளது. தற்கொலைகளும், பட்டினிச் சாவுகளும் தலைவிரித்தாடுகின்றன. தற்போது விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கும் சட்டத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்வில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் மோடி ஆட்சி செயல்படுகிறது.

அனைத்தும் தனியார் மயம்

மோடி ஆட்சி அன்னிய மூலதனத்தைக் கவர்வது எனும் பேரில் வங்கிகள், இன்சூரன்ஸ், இரயில்வே மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் திறந்துவிடுகிறது. நாட்டின் 11 துறைமுகங்களை கார்ப்பரேட் மயமாக்கியுள்ளது. சுரங்கம் மற்றும் கனிம வளங்களை பன்னாட்டுக் கம்பெனிகள் ஏலம் எடுப்பதற்கு வசதியாக சட்டங்களைத் திருத்திவிட்டது. இவ்வாறு அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளைத் தனியாருக்கு தாரைவார்த்து அரசாங்க கஜானாவைக் காலிசெய்கிறது. நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டுகிறது. மறுபுறம் பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடி அளவுக்கு சலுகைகளை வாரிவழங்குகிறது. அரசாங்கம் மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டிய கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற திட்டங்களை எல்லாம் தனியார்மயம் வணிகமயமாக்குவதைத் தீவிரப்படுத்துகிறது. ஆதார் அட்டை மூலம் நேரடி மானியம் என்ற பேரில் நியாயவிலைக் கடைகளுக்கும், இந்திய உணவு கழகத்திற்கும் மூடுவிழா நடத்துகிறது. சுருங்கச் சொன்னால் மோடி ஆட்சி புதிய தாராளக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்தி இந்திய நாட்டை அமெரிக்காவின் புதியகாலனிய சுரண்டல் களமாக மாற்றுகிறது. ஏகாதிபத்திய நெருக்கடியின் சுமைகள் முழுவதையும் மக்கள் மீது சுமத்துகிறது. மோடி ஆட்சியின் தேசவிரோதக் கொள்கைகளை எதிர்த்து நாடுமுழுவதும் அனைத்துப் பிரிவு மக்களும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர். இப்போராட்டங்களை நசுக்குவதற்காக மோடி ஆட்சி இந்துத்துவப் பாசிசத்தை கட்டவிழ்த்துவிடுகிறது.

இந்துத்துவப் பாசிசம்!

மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தவுடன் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் இந்துத்துவப் பாசிசக் கொள்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. மதமாற்றத் தடைச்சட்டம், பசுவதைத் தடைச் சட்டம், இராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டம், பகவத் கீதையை புனித நூலாக அறிவிக்க வேண்டும் என்பன போன்ற மதவெறி கருத்துக்களை பிரச்சாரம் செய்வதன் மூலம் சிறுபான்மை மதத்தினர் மீது தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. அத்துடன் இந்து மதமொழியான சமஸ்கிருதத்தைக் கல்வியில் திணிப்பது, இந்தி மொழியை திணிப்பது ஆகியவற்றின் மூலம் பிற தேசிய இன மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.

மோடி கும்பல் இந்துத்துவப் பாசிசத்தைக் கட்டவிழ்த்துவிடுவதற்கான காரணம் மோடி ஆட்சி இந்தியாவை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றுவதை மூடிமறைப்பது, ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டங்களை திசைதிருப்புவது, மக்களை மத ரீதியில் மோதவிட்டு பிரித்தாளுவது போன்ற சூழ்ச்சிகளேயாகும். எனவே மோடி கும்பலின் இந்துத்துவப் பாசிச ஆட்சியை எதிர்த்த போராட்டம் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டமுமாகும். எனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், இந்துத்துவப் பாசிச சக்திகள் சிறுபான்மை மதத்தினர் மீது தொடுக்கும் மதக்கலவரங்களை எதிர்த்தும், இந்தி, ஆங்கில மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழ்மொழியை ஆட்சிமொழி, பயிற்று மொழியாக்குவதற்காகவும் போராட வேண்டும்.

 பாலைவனமாகும் தமிழகம்!

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற தமிழகத்தின் முக்கிய ஆற்றுப் பிரச்சினைகளில் கர்நாடகம், கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தமிழகத்தின் கடைமடை உரிமையை மறுத்துவருவதால் தமிழகம் விரைவில் பாலைவனமாக மாறும் அபாயத்தில் உள்ளது. அண்மையில் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் 48 டி.எம்.சி. நீரைத் தேக்குவதற்கு அணைகட்ட திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த மறுத்துவருகிறது. தற்போது புதிய அணைகட்டுவதன் முலம் தன்னுடைய அணைகளில் நிரம்பி வழியும் உபரி நீரையும் தமிழகத்திற்குத் தரமறுத்து காவிரியில் கர்நாடகம் ஏகபோக உரிமை கொண்டாடுகிறது.

மத்திய அரசோ காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டாலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து அதிகாரபூர்வமாக தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட மறுக்கிறது. பற்றாக்குறைக் காலங்களில் நீரைப் பங்கிட்டுக் கொள்வதற்கு ஒரு சரியான தீர்வை முன்வைக்க மறுக்கிறது. நதிநீர்ப் பிரச்சினையில் “ஹெல்சிங்கி” கோட்பாட்டின் அடிப்படையில் தமிழகத்தின் கடைமடை உரிமையைப் பாதுகாக்கத் தவறுகிறது. மேலும் நதிகளை இணைப்பதன் மூலம் நீர்ப்பற்றாக்குறை மாநிலங்களின் தேவையை நிறைவேற்ற மறுக்கிறது. மாறாக மோடி அரசாங்கம் பட்ஜெட்டில் நீர்ப்பாசனத்திற்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டு, கங்கையைச் சுத்தப்படுத்த ஒரு லட்சம் கோடி ஒதுக்கி இந்துத்துவ புனிதத்தை மீட்கிறது. தமிழகத்திற்கு துரோகம் இழைக்கிறது.

ஊழல் மலிந்த ஜெயாவின் “பினாமி” கும்பலே தமிழக ஆட்சியைவிட்டு வெளியேறு!

தமிழகத்தை ஆளும், ஊழல் குற்றத்திற்காக தண்டனை பெற்றுள்ள ஜெயாவின் “பினாமி” ஆட்சி, ஜெயாவைத் தண்டனையிலிருந்து மீட்பதற்காக மோடி கும்பலின் தேசவிரோத மக்கள் விரோத ஆட்சிக்குத் துணைபோகிறது. மோடி ஆட்சி கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ஆதரிப்பதுடன் தமிழகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அன்னிய முதலீட்டை வரவேற்க மாநாடு நடத்துவதற்கு “ஜெயாவின்” விடுதலையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அத்துடன் இந்தப் பினாமி ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நிரம்பி வழிகிறது. எனவே ஊழல் மலிந்த ஜெயாவின் பினாமி கும்பலை ஆட்சியை விட்டு வெளியேற்றுவது தமிழக மக்களின் தேவையாக உள்ளது.
எனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்கும், இந்தியாவை அமெரிக்காவின் புதியகாலனியாக மாற்றுவதற்கும் சேவை செய்யும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியை எதிர்த்து இம் மே நாளில் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள அறைகூவி அழைக்கிறோம்!

      *  மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வெல்க!
      *  அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கும் இந்தியாவின் மீதான புதிய காலனி ஆதிக்கத்திற்கும் சேவை செய்யும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியை எதிர்ப்போம்!
      *  அந்நிய மூலதன கொள்ளைக்காகத் தொழிலாளர்கள் மீது கொத்தடிமைத்தனத்தை திணிக்கும் சட்டத்திருத்தத்தை அனுமதியோம்!
      *  பன்னாட்டுக் கம்பெனிகளின் நலன்களுக்கான நிலத்தைக் கையகப்படுத்தும் சட்டத்தைக் கைவிடு!
      *  மோடி அரசே! காவிரியில் மேக தாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்து! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை!
      *  கட்டாய ஆட்சி மொழியாக இந்தி மொழியைத் திணிப்பதை எதிர்ப்போம்! தமிழை ஆட்சி மொழியாக்கப் போராடுவோம்!
      *  பசுவதைத் தடைச் சட்டம், மத மாற்றத் தடைச் சட்டங்களை அனுமதியோம்!
      *  ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் இந்து ராஜ்ஜியக் கனவைத் தகர்த்தெறிவோம்!
      *  ஊழல் மலிந்த ஜெயாவின் பினாமி கும்பலே, தமிழக ஆட்சியை விட்டு வெளியேறு!
      *  உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு   மே 2015

Sunday 26 April 2015

மே நாள் கழக முழக்கங்கள்!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்                                                                                                     மே 2015

Saturday 18 April 2015

ஆந்திர அரச பயங்கரவாதம்: கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்








20 தமிழ்த் தொழிலாளர்கள் படுகொலை: ஆந்திர சந்திரபாபு நாயுடு அரசின் “அரச பயங்கரவாதத்தை” முறியடிப்போம்!



அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக வாதிகளே!

செம்மரம் வெட்டிக் கடத்தியதாகக் கூறி திருப்பதி சேசாசலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்களை ஆந்திராவின் அதிரடிப்படை (08-04-2015 அன்று) சுட்டுப் படுகொலை செய்துள்ளது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து சிறையிலடைத்து வருகிறது.

“சரண் அடையாததாலும், திருப்பி எங்களைத் தாக்கியதாலும் என்கவுண்ட்டர் நடத்தவேண்டிய சூழ்நிலை” என்று ஆந்திர போலீசும், சந்திரபாபுநாயுடு அரசாங்கமும் இந்தப் படுகொலையை நியாயப்படுத்துகின்றனர். 

ஆனால் பேரூந்தில் பயணம் சென்றவர்களைக் கைது செய்து சித்திரவதை செய்துதான் கொன்றார்கள் என்பதை “தோல் உரிக்கப்பட்ட கைகள், கருக்கப்பட்ட உடல்கள், அடித்துத் துன்புறுத்திய காயங்கள், என்று தமிழ்த் தொழிலாளர்கள் உடலில் இருந்த அத்தனை ரணங்களையும்” நேரடியான சாட்சிகளையும் கொண்டு தடய அறிவியல் அறிஞர்களும், ஆந்திரப்பிரதேச சிவில் உரிமை அமைப்புகளும் நிரூபித்துள்ளன.

எனவே தமிழ்த் தொழிலாளர்கள் 20 பேர்களின் பச்சைப் படுகொலை சந்திரபாபு நாயுடு அரசாங்கத்தின் “அரச பயங்கரவாதம்தான்” என்பது அம்பலப்பட்டுவிட்டது.

20 தமிழ்த் தொழிலாளர்களைச் சந்திரபாபுநாயுடு அரசாங்கம் சுட்டுக் கொன்றதற்கான காரணம் என்ன?

ஆந்திராவில் செம்மரக் கடத்தல் கும்பல்களுக்கு இடையிலான போட்டியில் அதிகாரத்தின் கொடுங்கரங்கள் தமிழ்த் தொழிலாளர்களின் உயிர்களைப் பறித்திருக்கின்றன. செம்மரக் கடத்தலில் ஈடுபட்டுவரும் கெங்கி ரெட்டி மற்றும் பாஸ்கர நாயுடு போன்ற மாஃபியா கும்பல்களைக் காப்பாற்றவும், ஆந்திர அரசிற்கும் இந்த மாஃபியா கும்பல்களுக்கும் இடையிலான கள்ள உறவுகளை மூடிமறைக்கவும் இப்படுகொலைகளை சந்திரபாபுநாயுடு அரசாங்கம் திட்டம்போட்டு நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள்தான் செம்மரக் கடத்தலுக்குக் காரணம் என்று காட்டி உண்மையான குற்றவாளிகளை மூடிமறைக்கவே 20 தமிழ்த் தொழிலாளர்கள் பலிகடாவாக்கப்பட்டுள்ளனர். அதற்காகத்தான் திட்டமிட்டே தமிழ்த் தொழிலாளர்களைக் கொன்று அதற்கு இனவாத வடிவத்தைக் கொடுக்கிறது.

ஆனால் செம்மரக் கடத்தலில் தண்டிக்கப்பட வேண்டிய உண்மையான குற்றவாளிகள் யார்?

ஆந்திராவில் செம்மரக் கடத்தல் தொழில் என்பது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டிப் பறந்துவருகிறது. இந்த கடத்தல் தொழில் ஆட்சியாளர்களின் ஆசியோடும் கூட்டோடும்தான் நடந்துவருகிறது. கடந்த ராஜசேகர ரெட்டியின் ஆட்சியின்போது கெங்கி ரெட்டி கும்பல் இத்தொழிலை சிறப்பாக நடத்திவந்தது. தற்போது சந்திரபாபு கூட்டணியின் பாஸ்கர நாயுடு கும்பல் சிறையிலிருந்து கொண்டே கடத்தல் தொழிலைக் கன கச்சிதமாகச் செய்துவருகிறது. முன்பு, “கெங்கி ரெட்டியால் எனக்கு எப்போதும் ஆபத்து இருக்கிறது; துபாயில் தங்கி இருக்கும் அவனை கைது செய்து, அவனது சொத்துக்களைப் பறிமுதல் செய்யவேண்டும்; எனக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும்” என்று கவர்னரிடம் மனுகொடுத்தவர் சந்திரபாபு நாயுடு. தற்போது “தான்” ஆட்சிக்கு வந்தவுடன் தனக்கு நெருக்கமான பாஸ்கர நாயுடு செம்மரக் கடத்தல் மாஃபியா கும்பலுக்கு ஆதரவாக கெங்கி ரெட்டி ஆட்களின் மீது தனது அரசியல் பழிவாங்கலை நடத்தி முடித்துள்ளது. அதற்கு தமிழக கூலித் தொழிலாளர்களைப் பகடைக் காயாக்கிப் பலிவாங்கியுள்ளது சந்திரபாபு நாயுடு அரசாங்கம்.

பொதுச் சொத்துக்களைக் கொள்ளையிடும் மாஃபியா கும்பல்கள்

இயற்கை வளங்கள், கனிம வளங்கள், காட்டுவளங்கள் போன்ற இந்திய நாட்டின் பொதுச் சொத்துக்களைச் சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் கடத்திக் கொள்ளையடிப்பது என்பது, இந்திய அரசாங்கம் தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்தத் தொடங்கிய பின்பு தீவிரமடைந்துள்ளது. ஆந்திராவின் விலை மதிக்க முடியாத செம்மரங்கள் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன. செம்மரக் கடத்தலின் தூண்களாகத் திகழ்கின்ற வெளிநாட்டுக் கடத்தல்காரர்கள், மரம் கடத்தும் மாஃபியாக்கள், ஏஜெண்டுகள் போன்ற இவர்கள் யாருமே காட்டுக்குள் போகமாட்டார்கள். ஆனால் இவர்கள்தான் மரக்கடத்தலில் முன்வரிசையில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய்களை கொள்ளையடிக்கின்றனர்.

செம்மரம் கடத்துவதில் ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் துவங்கி தமிழகத்தின் திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்கள் வரை ஒரு மாபெரும் வலைப்பின்னல் உருவாக்கப்பட்டுள்ளது.

செம்மரங்களைக் கடத்துவது பெரும்பாலும் சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள் மூலமாகவும், ஆந்திராவின் விசாகப்பட்டினம் துறைமுகம் மூலமாகவும், சாலை வழிகள் மூலமாகவும் கடத்தப்படுகின்றன. மாஃபியா கும்பல்கள் செம்மரக் கட்டைகளைத் துறைமுகத்திற்குக் கொண்டுச் செல்வதற்கு, சென்னைத் துறைமுகத்தில் அதிகாரம் செலுத்தும் ஒருவரிடம் பேரம் பேசப்படுகிறது.

வேலூர் காங்கிரஸ் பிரமுகர், அணைக்கட்டு அரசியல் பிரமுகர், திருத்தணியைச் சேர்ந்த மற்றொரு அரசியல் பிரமுகர், தேசியக் கட்சியைச் சேர்ந்த தமிழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆகியோர் சென்னைத் துறைமுகத்தில் கோலோச்சுகின்ற கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்தான்.

செம்மரக் கடத்தல் மாஃபியா கூட்டத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், கடத்தல்காரர்கள், முதலாளிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் என சமூகத்தில் அரசியல் செல்வாக்குப் பெற்றவர்கள் உள்ளனர். இவர்களின் கீழ் சிலரை ஏஜெண்டுகளாக நியமித்து 1 டன் செம்மரத்துக்கு ரூ. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை பணம் தருகிறார்கள். ஏஜெண்டுகள் தங்களுக்குக் கீழ் 10, 20 புரோக்கர்களை நியமிக்கிறார்கள். அந்த புரோக்கர்கள் தலா நூறு தொழிலாளர்கள் வரை மரம் வெட்ட அழைத்துச் செல்கின்றனர்.

வறுமையில் சிக்குண்டவர்களை - கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியான திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, கல்வராயன் மலைப்பகுதி மக்களையும், ஈரோடு பர்கூர் மலைப் பகுதியினரையும் - குறிவைத்து இந்தச் சமூக விரோதிகள் அணுகி ஆசைகாட்டி “கூலித்தொழிலாளர்களாக” செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இம்மக்களுக்கு முன்கடன் கொடுத்தும், குறிப்பிட்ட அளவு மரத்தை வெட்டித்தர வேண்டும் என நிர்ப்பந்தப் படுத்தியும் கொத்தடிமைகளாக அவர்களைப் பயன்படுத்தியுள்ளனர். கடந்த வருடம் இதுபோன்று மரம் வெட்டிய விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியின் சிவா, விஜயகாந்த், வெங்கடேசன் உள்ளிட்ட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2010 முதல் சுமார் 1500க்கும் மேற்பட்ட வழக்குகள் செம்மரக் கடத்தல் தொடர்பாகத் தொடுக்கப்பட்டு 2000க்கும் மேற்பட்ட தமிழ்க் கூலித் தொழிலாளர்கள் ஜாமீன் மறுக்கப்பட்டு ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்களை தனி சிறையில் வைத்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது.

இவர்கள் அனைவரும் மாஃபியா கும்பல்களால் கொத்தடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டவர்கள். நிர்ப்பந்தத்தால் இத்தொழிலில் தள்ளப்பட்டவர்கள். இவர்கள் உண்மையில் குற்றவாளிகள் அல்லர். திட்டமிட்டு அரசாங்கத்தின் உதவியோடு மரக் கடத்தலில் ஈடுபடும் மாஃபியா கும்பல்கள்தான் உண்மையான குற்றவாளிகள். ஆனால் ஆந்திர அரசாங்கமோ, தமிழக அரசாங்கமோ செம்மரக் கடத்தலுக்கு மூலகாரணமாகவும், முதன்மைப் புள்ளிகளாகவும் திகழ்கின்ற இந்த மாஃபியா கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கின்றன. ஆந்திர அரசாங்கம் கூலித் தொழிலாளர்களைச் சுட்டுக் கொல்கிறது என்றால், தமிழக அரசோ அவர்களுக்கு வாய்க்கரிசி போடுவதுடன் நிறுத்திக் கொள்கிறது. தமிழகத்தில் செயல்படும் மரக்கடத்தல் மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழ்த் தொழிலாளர்களை சுட்டுக் கொல்வதாலோ சிறை பிடிப்பதாலோ செம்மரக்கடத்தல் ஒழியாது

எனவே தமிழ் மக்கள் 20 தமிழ்த் தொழிலாளர்களைப் படுகொலை செய்த சந்திரபாபு நாயுடு அரசாங்கத்தின் அரச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடவேண்டும். என்கவுண்ட்டரில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்படவேண்டும். கொலைக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டும். அத்துடன் மாஃபியா கும்பல்களை கைது செய்து சிறையிலடைப்பதோடு, கூலித் தொழிலாளர்கள் அனைவரையும் ஆந்திரச் சிறைகளிலிருந்து விடுதலை செய்யவேண்டும் என கோருகிறோம்.

தமிழகத்தில் மணல், கிரானைட் கொள்ளை

பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பது என்பது ஆந்திராவில் மட்டும் நடக்கவில்லை. தமிழகத்தில் தாதுமணல், ஆற்று மணலைக் கொள்ளையடிப்பதும், கிரானைட் கல்லுக்காக மலைகளையே திருடுவதும் கனஜோராக நடந்துவருகிறது. கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதாவின் பினாமி ஆட்சி இந்தக் கொள்ளைகளுக்குப் பக்கபலமாகச் செயல்படுவது நாடே அறிந்ததுதான். மணல் கொள்ளையன் வைகுண்டராசனுக்கும், ஆளும் கட்சிக்கும் உள்ள உறவுகளும், மணல், கிரானைட் கொள்ளையர்களுக்கும் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் உள்ள உறவுகளும் அனைவரும் அறிந்ததுதான். கிரானைட் கொள்ளை பற்றி விசாரித்த உயர்நீதிமன்றம் அமைத்த சகாயம் குழுவைச் சார்ந்த பார்த்தசாரதி மர்மமான முறையில் விபத்தில் இறந்துள்ளார். சகாயம் குழு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது. ஜெயலலிதாவின் பினாமி ஆட்சி பொதுச் சொத்துக்களைக் கொள்ளையிடும் மாஃபியாக்களின் பினாமி ஆட்சியாக மாறியுள்ளது. செம்மரக் கடத்தல் கும்பல் உள்ளிட்ட மாஃபியாக்களின் களமாக தமிழகம் மாறிவருகிறது.

மாஃபியா கும்பல்களுக்கு எதிராக அணிதிரள்வோம்!

பொதுச் சொத்துக்களைச் சூறையாடிக் கடத்துகின்ற மாஃபியா கும்பல்களை எதிர்த்து இருமாநில மக்களும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம்தான் முறியடிக்கமுடியும். செம்மரக் கடத்தலில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தமிழர் தெலுங்கர்களுக்கிடையிலான பிரச்சினை அல்ல. மாறாக இருமாநில மக்களுக்கும் எதிரான மாஃபியாக்களை எதிர்க்கும் பிரச்சினையாகும். ஆந்திராவிலும் இந்தப் படுகொலைக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போராடிவருகின்றன. வனம், மண், மரம், கிரானைட் என இயற்கை வளங்களைச் சூறையாடி லாபம் பார்க்கும் மாஃபியா கும்பல்களுக்கு தமிழன், தெலுங்கன் என்ற வேறுபாடுகள் இல்லை. ஆனால் சில தமிழ்த் தேசியம் பேசுகின்ற அமைப்புகள் இப்பிரச்சினையை இருமாநில மக்களுக்கும் இடையிலான மோதலாக மாற்ற விரும்புகின்றன. இது உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கவும், சந்திரபாபு நாயுடு அரசிற்குச் சாதகமான நிலைமையைத்தான் உருவாக்கும்.

இராமதாசு தலைமையிலான பா.ம.க. கட்சியோ 20 தமிழ்த் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தையும் சாதிவாத அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. தற்போது 20 பேரில் வன்னிய சாதியைச் சேர்ந்த ஆறு பிணங்களை மட்டும் தனியாக பாதுகாத்துச் சட்டரீதியான மேல்நடவடிக்கைகள் எடுப்பதும், அன்புமணி ராமதாசு அந்த ஆறு குடும்பங்களுக்கு மட்டும் நேரில் சென்று ஆறுதல் கூறுவதும் சாதிவெறி அரசியலின் வெளிப்பாடேயாகும். இது தமிழ் மக்களுக்கோ அல்லது வன்னிய சாதி மக்களுக்கோ நன்மை பயக்காது. மாறாக, போராடும் மக்களைச் சாதிய ரீதியில் பிளவுபடுத்துவது, மாஃபியா கும்பல்களையும் சந்திரபாபு நாயுடு அரசாங்கத்தையும்தான் பலப்படுத்தும்.

எனவே இனவாதம், சாதிவாதம் என தமிழ் மக்கள் பிளவுபடாமல் 20 தமிழ்த் தொழிலாளர்களைக் கொன்றொழித்த சந்திரபாபு நாயுடு அரசின் “அரச பயங்கரவாதத்தை” எதிர்த்தும், பொதுச் சொத்துக்களைக் கொள்ளையிடும் மாஃபியா கும்பல்களை எதிர்த்தும் போராடி முறியடிக்க வேண்டும். இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் கொள்ளையடிப்பதைத் தடுத்து நிறுத்த மக்கள் அதிகார அமைப்புகளை நிறுவ வேண்டும். எனவே, கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் அனைத்து உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும் ஓர் அணியில் திரளுமாறு அறை கூவி அழைக்கின்றோம்.

 ஆந்திர சந்திரபாபு நாயுடு அரசின் “அரச பயங்கரவாதத்தை” முறியடிப்போம்!

 ஆந்திர-தமிழக அரசுகளே,
செம்மரக் கடத்தல் மாஃபியா கும்பல்களைக் கைது செய்!

சிறைப்படுத்தப்பட்ட மாஃபியாக்களின் கொத்தடிமைத் தொழிலாளிகளை விடுதலை செய்!

பொதுச் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுவது ஆந்திரத்தில் மட்டுமல்ல – தமிழகத்தின் மணல், கிரானைட் மாஃபியா கும்பல்களைக் கைது செய்!

ஆளும் வர்க்க அரசியல் வாதிகள், காவல் துறை அதிகாரிகள், முதலாளித்துவக் கொள்ளையர்களை உள்ளடக்கிய மாஃபியா கும்பல்களின் அதிகாரத்தை எதிர்ப்போம்!

மக்கள் கமிட்டிகளின் அதிகாரத்திற்காகப் போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
ஏப்ரல் 2015

Sunday 5 April 2015

பா.ஜ.க. அரசே! கார்ப்பரேட் நலன்களுக்கான, 'நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை'த் திரும்பப்பெறு!



அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!

    காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசாங்கமும் அதற்குப் பின்னர் வந்துள்ள தற்போதைய பா.ஜ.க. அரசாங்கமும் விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தி பன்னாட்டு,உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்குவதற்காகக் கொண்டுவந்துள்ள சட்டங்களை எதிர்த்து இன்று நாடெங்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இச்சட்டங்கள் அனைத்தும் பிரிட்டிஷ் காலனிஆட்சியாளர்கள் நிலங்களை கையகப்படுத்துவதற்காகக் கொண்டுவந்த சட்டங்களின் தொடர்ச்சியேயாகும்.

 பிரிட்டிஷ் காலனி அரசு 1894ல், நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தது. அந்தச் சட்டத்தின் படி, அரசுக்கோ, அரசின் ஆதரவு பெற்றவர்களுக்கோ நிலம் தேவைப்படுமானால்,உடனே நிலம் கையகப்படுத்தப்படும். அரசுகொடுக்கும் இழப்பீடு போதவில்லை என்றால் மட்டும்தான் நீதிமன்றத்துக்குப் போகமுடியும். அங்கேயும் இழப்பீட்டை அதிகரித்துக் கேட்க முடியுமே தவிர நிலம்கையகப்படுத்தியதைத் தடுக்க முடியாது. இந்தச் சட்டம் காலனிய ஆட்சிக்குப் பிறகும் தொடர்ந்தது. காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களையே பொதுநலன் என சித்தரித்து,

விவசாயிகள் மற்றும் பழங்குடிமக்களின் நிலங்களை 1894 சட்டத்தின் கீழ் கையகப்படுத்தி அதை பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கியது. பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காகவும், ரியல் எஸ்டேட்டுகளுக்காகவும் கையகப் படுத்தப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களும், தரகுமுதலாளிகளும் முறைகேடாகப் பயன் படுத்தியுள்ளார்கள். வணிக நடவடிக்கைகள் மூலம் கொள்ளை லாபம் அடைந்துள்ளார்கள்.

 2006ஆம் ஆண்டிலிருந்து ஒப்புதல்கள் வழங்கப்பட்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 50 சதவீதத்திற்கும்மேல் பயன்படுத்தப்படாமல் வெறுமனே தரிசாகப் போடப்பட்டுள்ளன என்று இந்திய அரசின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அளித்த அறிக்கை தெரிவிக்கிறது.

 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகக் கையகப்படுத்தப்பட்ட 45,635.63 ஹெக்டேர் நிலத்தில் 28,488.49 ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. 5402.22 ஹெக்டேர் நிலம்

வணிக நோக்கத்திற்காக திருப்பிவிடப் பட்டுள்ளது. இந்த நிலங்கள் ‘பொதுநலன்’ என்ற வகையின (Classes) அடிப்படையில் கையகப்படுத்தப்பட்டவையாகும்.

 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நாடெங்கும் ஒதுக்கப்பட்ட பெரும்பகுதி நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளுக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளன. மும்பை தொழில் வளர்ச்சிக் கழகத்திடம் மட்டும் 2.5 லட்சம் ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தில் கையகப்படுத்தப்பட்ட 50,000 ஹெக்டேர் நிலம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. உ.பி.யில் 17,000 ஹெக்டேர் நிலமும் குஜராத்தில் 54,000
ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்தப்பட்ட பிறகு தரிசாகவே கிடக்கின்றன.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக ஒதுக்கப்பட்ட 46,000 ஹெக்டேர் நிலத்தில், 29,000 ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தில்தான் செயல்பாடுகள் துவங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. மற்ற பகுதி நிலங்கள் ரியல் எஸ்டேட் சூதாட்டத்திற்காகக் காத்துக்கிடக்கின்றன.

 மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலை அமைக்க முயற்சிக்கப்பட்டது. இதற்காக செழிப்பான நிலங்களை மேற்கு வங்க சி.பி.ஐ.எம். (CPIM) தலைமையிலான இடதுசாரி அரசாங்கம் வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்த எடுத்த முயற்சிகளை எதிர்த்து விவசாயிகள் கடுமையாகப் போராடினார்கள்.  இடது முன்னணி அரசாங்கம் நடத்தியதுப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் 1999ல் தி.மு.க. அரசு நிலங்களை கையகப்படுத்த கொண்டுவந்த சட்டம் அப்பட்டமாக விவசாயிகளுக்கு எதிரானது. விளை நிலங்களைக் குறைந்த விலையில் கைப்பற்றி தனியாருக்கு வாரி வழங்க உதவும் சட்டத்தின் கீழ் 2006-2011ல் கிட்டத்தட்ட 16 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றி அதில் பெரும்பாலான நிலத்தை ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு வாரி வழங்கியது.

மேலும் பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை அபகரித்துக் கொண்ட கார்ப்பரேட்டுகள், குறிப்பாக அம்பானி, அதானி, டாட்டா போன்ற தரகு பெருமுதலாளிகள் அவற்றை ரியல் எஸ்டேட்டுகளாக்கி விற்றிருப்பதும் அம்பலமாகியுள்ளது.

புதிய காலனியாதிக்க தாசர்களான காங்கிரஸ் ஆட்சியாளர்கள் நாடெங்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்க, விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் நிலங்களை மட்டுமே வளைத்துப் போடவில்லை. அங்கே தொழில் தொடங்குகிற அந்நிய நிறுவனங்களுக்கு பத்தாண்டுகள் வரிவிலக்கு, அந்த வளாகங்களில் தொழிற்சங்க உரிமை மறுப்பு, இந்தியத் தொழிலாளர் சட்டங்கள் அங்கே செல்லுபடியாகாது போன்ற ஏராளமான சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டன.

இந்த மண்டலங்களில் தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்கு 2009 முதல் 2015 வரையில் ரூ.83,104 கோடிகள் வரிச் சலுகைகளாகத் தரப்பட்டன. நேரடி வரிகளிலும் மறைமுக வரிகளிலுமாக இவ்வளவு பெரும் தொகை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அரசாங்கமே அளித்த இப்படிப்பட்ட சலுகைகள் ஒருபுறமிருக்க, இந்த மண்டலங்களில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 1150 கோடியாகும்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் செயல்பாடு பற்றி ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு 2004-2010ஆம் ஆண்டுகளிடையே இந்த மண்டலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட வரிவிதிப்பு முறைகள் காரணமாக

ரூ.1,74,487 கோடி வரையில் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது என்று 2007ல் மதிப்பீடு செய்தது.

இந்த மண்டலங்களால் வேலைவாய்ப்புப் பெருகும், முதலீடுகள் குவியும், பொருளாதாரம் வளரும் என்றெல்லாம் கூறப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் இந்த நோக்கங்கள் எதுவுமே நிறைவேறவில்லை. இதனை இந்திய அரசின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரே (சி.ஏ.ஜி.) அறிவித்திருக்கிறார்.

மன்மோகன்சிங் அரசு 2013-ல் கொண்டுவந்த புதிய சட்டம்

 நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத்தன்மை, நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறு வாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல் சட்டம் என்ற பெயரில் 2013-ல் புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது

மன்மோகன்சிங் அரசு. இந்தச் சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சேவை செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டது. எனினும் இந்தச் சட்டம் விவசாயிகளுக்குச் சில சலுகைகளை வழங்கியது.

கிராமப்புறங்களில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அரசு வழிகாட்டு மதிப்பைப்போல் நான்கு மடங்கும், நகர்ப்புற நிலங்களுக்கு அரசு வழிகாட்டு மதிப்பைவிட இரண்டு மடங்கும் இழப்பீடு தரப்படவேண்டும்.

தனியார் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த அப்பகுதியில் உள்ள 80 சதவீதம் நில உடமையாளர்களின் ஒப்புதல் தேவை. அரசு-தனியார்-பங்கேற்பு (PPP) திட்டங்களாக இருந்தால் அப்பகுதியிலுள்ள 70 சதவிகிதம் பேரின் சம்மதம் வேண்டும்.

நீர்ப்பாசனம் மிகுந்த பயிர் சாகுபடி செய்யும் நிலத்தைக் கையகப்படுத்தக் கூடாது. அதாவது ஒரு போகத்துக்கு மேல் விளையும் நிலத்தைக் கையகப்படுத்தக் கூடாது.

குறிப்பிட்ட பகுதியில் விளை நிலங்களை கையகப்படுத்துவதானால், அப்பகுதியில், விவசாயப் பொருளாதாரத்தைச் சார்ந்து வாழும் நிலமற்ற விவசாயிகள், கைவினைஞர்கள், உதிரித் தொழிலாளர்கள்,

சிறுவணிகர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்படும் வாழ்வாதாரப் பாதிப்பு (social impact assessment)  மதிப்பிடப்பட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும்.

   அப்பகுதியில் சுற்றுச் சூழல் எவ்வளவு பாதிக்கப்படும் (environmental impact assessment) என்பதும், விவசாயத்தின் மூலம் கிடைத்து வந்த வேலைவாய்ப்பு எவ்வளவு என்பதும் மதிப்பிடவேண்டும்.

  5-ஆண்டுகளுக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை என்றால், உடமையாளர்களிடமே (விவசாயிகளிடமே) நிலத்தைத் திருப்பித்தரவேண்டும்.

   இந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஏமாற்றும் அதிகாரிகளுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தொடரலாம்.

 நெடுஞ்சாலை, ரயில்பாதை, அணுசக்தி, இராணுவம் உள்ளிட்ட 13 துறைகளில் அரசின் திட்டங்களுக்கு மேற்கூறிய நிபந்தனைகள் பொருந்தாது என்றும் இச்சட்டம் விதிவிலக்கு அளிக்கிறது.

பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம்

இப்போது பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள சட்டம், காங்கிரஸ் கொண்டுவந்த சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து புதிய சட்டமாக நிறைவேற்ற முயற்சிக்கிறது. அப்படிச் செய்யப்பட்டிருக்கும் திருத்தங்கள்

அனைத்தும் அப்பட்டமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகவே இருக்கின்றன என்பதுதான் இப்போதைய பிரச்சினைக்குக் காரணமாகும்.

பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்த 1894 சட்டத்தில் கூட நியாயம் கேட்க நீதிமன்றத்தை அணுகமுடியும். ஆனால் பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத்தில் அதற்கு வழியேயில்லை. காங்கிரஸ் அரசின் சட்டம்
கார்ப்பரேட் நலன்களை ‘பொதுநலன்’ என்று கருதுவதைப் போலவே, பா.ஜ.க. அரசு கொண்டுவந்த இந்தச் சட்டமும் கார்ப்பரேட் நலன்களை ‘பொது நலன்’ என்று கருதினாலும், காங்கிரஸ் அரசு கொண்டுவந்த சட்டத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சில சலுகைகள் கூட இச்சட்டத்தில் கைவிடப்படுகிறன.
* தற்போது பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தில் முப்போகம் விளையும் நிலங்களைக் கூட கையகப்படுத்தலாம்.
 * தற்போது பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ளச் சட்டம், 13 துறைகளுக்கு காங்கிரஸ் அரசு அளித்திருந்த விதிவிலக்குகளைக் கைவிட்டுள்ள அதே நேரத்தில், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறைகளை விதிவிலக்கு பட்டியலில் கொண்டு வந்துள்ளது.
* பா.ஜ.க. அரசின் சட்டப்படி, அரசுத் துறைகளுக்கு மட்டுமின்றி, எந்த ஒரு தனியார் முதலாளிகளுக்காக நிலத்தைக் கையகப்படுத்துவதாக இருந்தாலும் விவசாயிகளின் ஒப்புதலை அரசு கேட்கத் தேவையில்லை.
 * அப்பகுதியைச் சேர்ந்த நிலமற்ற கூலி விவசாயிகள், கைவினைஞர்கள் போன்றோருக்கு நிவாரணம் தரத் தேவையில்லை.
* சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்துப் பரிசீலிக்கத் தேவையில்லை.
 *  கையகப்படுத்திய நிலம் 20 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தாமல் இருந்தாலும் அதைத் திருப்பித்தர வேண்டியதில்லை.
*  ‘தனியார்’ என்பதை ஒரு தொழில் நிறுவனம் என்று காங்கிரஸ் கட்சியின் 2013ஆம் ஆண்டு சட்டம் வரையறுத்திருந்தது. ஆனால் பா.ஜ.க. அரசின் சட்டப்படி ‘தனியார்’ என்பது நபராகவோ தன்னார்வ நிறுவனமாகவோக் கூட இருக்கலாம்.
 * அதுமட்டுமல்ல, தனியார் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவ மனைகள் ஆகியவற்றையும் ‘பொதுச்சேவை’ என்று வரையறுத்துள்ளது. அவற்றிற்கு விளை நிலத்தைக் கையகப்படுத்தித் தரும் பொறுப்பை அரசு ஏற்றுக்கொள்கிறது.
* நிலத்தின் சந்தை விலையைத் தீர்மானிப்பது உள்ளிட்டு, இந்தச் சட்டத்தை அமலாக்கும் அரசதிகாரம் பெற்ற மத்திய, மாநில அரசு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டோர் வழக்குத் தொடுக்க முடியாது. அரசின் அனுமதி பெறாதபட்சத்தில் அதை நீதிமன்றமும் விசாரிக்கக் கூடாது.

இவைதான் பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள நிலத்தைக் கையகப்படுத்தும் சட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களாகும்.

  காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க. கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுப்பதில் ஒரே கொள்கையுடை யனவாக இருந்தாலும், விவசாயிகளுக்கு அளிக்கப்படவேண்டிய சலுகைகளை வழங்குவதில் வேறுபட்ட நிலையைக் கொண்டுள்ளன.

காங்கிரஸ், பா.ஜ.க. தலைமையிலான இரண்டு அணிகளும் கார்ப்பரேட் நலன்களுக்கான அணிகளே!

 பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி 8 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கும் கீழ் வீழ்ச்சியடைந்ததற்குக் காரணம், காங்கிரஸ் ஆட்சி பின்பற்றிவந்த
உலகமயமாக்கல் கொள்கைகளால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி என்பதை ஏற்க மறுத்தது. மாறாக காங்கிரஸ் ஆட்சியின் “கொள்கை முடக்கமே” காரணம் என்று கூறி அதே கொள்கைகளைத் தீவிரமாகச்
செயல்படுத்தி வருகிறது. மீண்டும் உற்பத்தித் துறையில் எழுச்சியைக் கொண்டு வருவதற்கு அந்நிய மூலதனத்தைச் சார்ந்திருப்பது ஒன்றுதான் தீர்வு என்று கூறுகிறது. இதனடிப்படையில்தான் இன்று, அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் மீள முடியாத நெருக்கடிகளுக்குத் தோள்கொடுக்கும் விதமாகவே “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” என்ற முழக்கத்தை முன்னிறுத்துகிறது. தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவது, நிலம்
கையகப்படுத்தும் சட்டங்களைத் திருத்துவது, சுரங்கம் தொடர்பான சட்டங்களைத் திருத்துவது, காப்பீட்டுச் சட்டங்களைத் திருத்துவது ஆகியவற்றின் மூலம் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை
காங்கிரசை விட தீவிரமாக செயல்படுத்துகிறது.

விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதில் பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்குச் சாதகமாகவே, காங்கிரஸ் கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் காங்கிரசைவிடவும் மோசமான திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. தற்போது மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள சட்டத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் பா.ஜ.க. அணி, காங்கிரஸ் அணிகளுக்கிடையில் போராட்டம் தீவிரப்பட்டுள்ளது. பா.ஜ.க. அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐக்கிய ஜனதாதளம்,

ராஷ்டிரிய ஜனதாதளம், மதச் சார்பற்ற ஜனதாதளம், தி.மு.க. உள்ளிட்ட 10 கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

தமிழக ஆளும் கட்சியான அ.தி.மு.க. மசோதாவுக்கு ஆதரவளித்துள்ளது. தனியார் சுயநிதிக் கல்லூரிகள், மருத்துவ மனைகளுக்காக நிலம் கையகப்படுத்தப்படக் கூடாது மற்றும் நிலம் கையகப்படுத்தும் அதிகாரம் மாநில அரசாங்கத்திடம் இருக்கவேண்டும் என்ற தங்களின் திருத்தத்தை ஏற்றுக்கொண்டதால் இந்தச்சட்டத்தை ஆதரித்தோம் என அக்கட்சியின் தலைவி ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் ஊழல் வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ஒட்டுமொத்த விவசாயிகளையும் பலிக்கடா
ஆக்கியுள்ளார் என்ற முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்.

 பா.ஜ.க.வின் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளான சிவசேனா, அகாலிதளம், லோக் ஜனசக்தி (LJP) மற்றும் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி (RSLP) ஆகியவை பா.ஜ.க.வின் மசோதாவுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஸ்வபிமானா பக்ஷா கொண்டுவந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. சிவசேனாக் கட்சி மசோதாவுக்கு எதிராகவே உள்ளது.

 இவ்வாறு நாடாளுமன்றவாதக் கட்சிகள் பா.ஜ.க. அணி, காங்கிரஸ் அணி என பிரிந்து கடுமையாகப் போராடுகின்றன.

ஆனால் இவ்விரண்டு அணிகளுக்கிடையில் நடைபெறும் போராட்டத்தின் உண்மையான வேறுபாடு என்ன?

 காங்கிரஸ் அணி கொண்டுவந்த 2013 சட்டத்தின் பொது நலன்களுக்காக நிலம் கையகப்படுத்துவதில் 80 சதவீத விவசாயிகளின் ஒப்புதலும் பொதுத்துறை-தனியார் பங்கேற்பு திட்டங்களுக்கு 70 சதவீத விவசாயிகளின் ஒப்புதலும் தேவை என்பதை பா.ஜ.க. கொண்டுவந்த சட்டம் நிராகரிக்கிறது.

 2013 சட்டத்தின்படி, நிலம் கையகப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் உபயோகப்படுத்தாமல் இருந்தால் அந்த நிலங்களை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைத்துவிட வேண்டும் என்பதை பா.ஜ.க. கொண்டுவந்துள்ள சட்டம் ஏற்கவில்லை.

 2013- சட்டத்தின்படி, ஒரு போகத்துக்கு மேல் விவசாயம் செய்யும் விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று இருந்ததை ஏற்காமல் மூன்று போகம் விவசாயம் செய்யும் நிலங்களையும் கையகப்படுத்தலாம் என்று திருத்தப்பட்டுவிட்டது. இதனடிப்படையில் பார்த்தால் பா.ஜ.க கொண்டுவந்துள்ள இந்தச் சட்டத்திருத்தங்கள் அனைத்தும் கார்ப்பரேட் நலன்களுக்குச் சாதகமானது என்பது உண்மையே.

 ஆனால், பாஜக அணி சார்பாக இதனை மறுத்து மோடி பேசும்போது ... “விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு காங்கிரஸ் ஆட்சியாளர்கள் 120 ஆண்டுகள் பழமையான சட்டத்தை (1894-ல் பிரிட்டிசார் கொண்டுவந்த சட்டத்தை) பயன்படுத்தினர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் கடந்த 60 முதல் 65 ஆண்டுகளாக அதே சட்டத்தைப் பின்பற்றிய அவர்கள், 2013 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் இருக்கும் குறைகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எனது அரசு மீது குற்றம் சாட்டுகின்றனர்” என்று கூறுகிறார்.

ஆனால் 1894 - சட்டத்தின்படி, கார்ப்பரேட் நலன்களையே பொது நலன்களாகச் சித்தரித்து, விவசாயிகள் நிலங்கள் கைப்பற்றப்பட்ட அதே கோட்பாட்டைத்தான் மோடி கொண்டுவந்துள்ள சட்டமும்

கடைப்பிடிக்கிறது என்பதை அவரே ஒப்புக் கொள்கிறார். ஆகவே காங்கிரஸ்காரர்களைப் போலவே பா.ஜ.கவினரும் காலனியாதிக்கத் தாசர்களாகவே செயல்படுகின்றனர். புதிய மசோதாவில் வளர்ச்சிப்

பணிகளுக்கு கையகப்படுத்தும் நிலங்களில் 20 சதவீதத்தை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும், அவரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத்

திருத்தம் கார்ப்பரேட்டுகளுக்கு நிலம் கையகப்படுத்துவதை உத்திரவாதப் படுத்துவதாகவும், விவசாயிகளுக்கு சில்லரைச் சலுகைகள் கொடுத்து நிலம் கையகப்படுத்துவதை நியாயப்படுத்துவதாகவே உள்ளது.

எனவே இது ஏற்கத் தகுந்தது அல்ல.

  காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்தில் இல்லாத, அரசு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு 4 மடங்கு விலை கொடுக்கப்படும் என்று பாஜகவின் மோடி கூறுவதன் பொருள் என்ன? அரசு திட்டங்கள்,

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களை, அரசு-தனியார் கூட்டு என்ற பேரில் நிலங்களை கையகப்படுத்தி பன்னாட்டுக் கம்பெனிகளிடமும், உள்நாட்டு அம்பானி, அதானி, டாட்டாக்களிடமும் ஒப்படைப்பதுதான். பன்னாட்டுக் கம்பெனிகள், உள்நாட்டு தரகுப் பெருமுதலாளிகளின் நலன்கள்தான் அவர் கூறும் தேசநலன் என்பது. நாட்டு நலன்களோ, விவசாயிகளின் நலன்களோ அல்ல.

எனவே மோடி கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டம் கார்ப்பரேட் நலன்களுக்குச் சேவை செய்யும் சட்டமே. அச்சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டிய சட்டமே.

ஆனால் மோடி கொண்டுவந்துள்ள சட்டத்தை திரும்பப்பெறுவது மூலம் மட்டுமே நாட்டின் நலன்களையும், மக்களின் நலன்களையும் பாதுகாத்துவிட முடியாது. நாட்டின் நலனும், விவசாயிகளின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டுமானால்,பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட் நலன்களையே பொது நலனாகச் சித்தரித்து விவசாயிகள், பழங்குடி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தும் புதிய காலனியச் சட்டங்கள் அனைத்தும் முறியடிக்கப்பட
வேண்டும்.

அதுமட்டுமின்றி கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பயன்படுத்தப்படாத நிலங்களாய்ப் பாழாய்க் கிடப்பதையும், ரியல் எஸ்ட்டேட்டிற்காகத் திருப்பி விடுவதையும், மீண்டும் சுரண்டும் வர்க்கங்களின் கைகளுக்கு அந்த நிலங்கள் போகாமல் தடுத்து நிறுத்துவதற்காகவும், அந்நிலங்களை ஏழை, எளிய, நடுத்தர விவசாயிகள், தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளடக்கிய கூட்டுப் பண்ணைகள் உருவாக்கிட வேண்டும்.
அதுவே இன்றைய உடனடித் தேவையாகும். அதுவே ஏகாதிபத்தியத்தை எதிர்த்த, நிலப் பிரபுத்துவத்தை எதிர்த்த விவசாயிகளின் தவிர்க்க முடியாத கோரிக்கையாகும்.

ஆனால் இன்று மோடி அரசாங்கம் கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு எதிராக நடைபெறும் பாராளுமன்றப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு அணிகளுமே, கார்ப்பரேட் நலன்களையே பொது நலன்களாக சித்தரித்து விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்ப்பவையல்ல. தொண்டு நிறுவன ஆர்வலர் அன்னா அசாரே நடத்தும் போராட்டமும் கார்ப்பரேட்டுகளுக்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்க்கவில்லை. சலுகைகளைத்தான் கோருகின்றனர். எனவே இந்த அணிகள் அனைத்தும் கார்ப்பரேட் நலன்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு ஆதரவான அணிகள்தான்.

 இன்று பாஜக, காங்கிரஸ் அணிகளுக்கிடையில் நடக்கும் போராட்டத்தில், பாஜக கொண்டுவந்தச் சட்டத்தை நிராகரிப்பதா அல்லது காங்கிரஸ் சட்டத்தை ஏற்பதா என்பதே மையப் பொருளாக உள்ளது.

இரண்டு சட்டங்களும் கார்ப்பரேட் நலன்களுக்கானதே ஒழிய மக்கள் நலன்களுக்கானது அல்ல.

எனவேதான் பாட்டாளி வர்க்க இயக்கம் இரண்டு அணிகளையும் நிராகரித்துவிட்டு பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் புரட்சிகர ஜனநாயக சக்திகள் ஓரணியில் அணிதிரள அறைகூவி அழைக்கிறோம்.

  * பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நலன்களையே ‘பொது நலனாக’ சித்தரித்து விவசாயிகள், பழங்குடி மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தும் புதிய காலனிய சட்டங்களை முறியடிப்போம்!

 * சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்திய வேளாண் நிலங்களை அரசுடமையாக்கு!

  * பயன்படுத்தப்படாத நிலங்களை கைப்பற்றி ஏழை, எளிய, நடுத்தர விவசாயிகள், தாழ்த்தப்பட்ட மக்களை உள்ளடக்கிய கூட்டுப் பண்ணைகளை உருவாக்கு!

  * கார்ப்பரேட் நலன்களையே ‘பொது நலன்களாக’ கருதும் பா.ஜ.க, காங்கிரஸ் அணிகளை எதிரித்து புரட்சிகர ஜனநாயக சக்திகள் ஒன்றுபடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
 ஏப்ரல், 2015