Friday 1 September 2017

ஒன்றுபட்ட முன்னணி அமைத்து ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்துப் போராடுவோம்!


Thursday, August 31, 2017

மோடிஅரசே…!

பன்னாட்டு உள்நாட்டுக் கார்ப்பரேட்

முதலாளிகளுக்கு சேவை செய்யும் 'ஜி.எஸ்.டி' வரியை

திரும்பப் பெறு!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!

மத்தியில் ஆளும் இந்துத்துவப் பாசிச மோடி அரசாங்கம், கடந்த ஜூன் 30-ஆம் நாள் நள்ளிரவில் “பொருட்கள் மற்றும் சேவை வரிச்சட்டத்தை (ஜி.எஸ்.டி) அமல்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி என்ற பேரில் பொருளாதாரம் மற்றும் வரிவிதிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்ற, சட்டமன்றங்களிடம் இருந்து பறித்து, பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்துவிட்டது. 1947, ஆகஸ்ட்-15 நள்ளிரவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து அரசியலதிகாரம் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டது. ஆனால், ஜூன் 30 நள்ளிரவில் மோடி நடத்திய நாடாளுமன்றக் கூட்டம் பொருளாதார மற்றும் வரிவிதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நாட்டின் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்துவிட்டது.

இதற்கு முன்னர் மத்திய அரசு உற்பத்தி (கலால்) வரி, சேவை வரிகளையும்; மாநில அரசுகள் தனித்தனியே விற்பனை வரியையும் விதித்து வந்தன. தற்போது ஜி.எஸ்.டி. மூலம் அத்தகைய பன்முக வரிகளை ஒழித்து 5%, 12%, 18%, 28% என்ற படிநிலையில் ஒரே வரியாக மாற்றியுள்ளது. ஒரு நாடு, ஒரு சந்தை, ஒரு வரி என்ற பேரில் இந்தியச் சந்தையை பன்னாட்டு உள்நாட்டு லாஜிஸ்டிக் கம்பெனிகளுக்கு திறந்து விட்டுள்ளது. இதனால் அந்நிய மூலதனம் குவியும்; நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி (GDP) 2-சதவீதம் வளர்ச்சியடையும்; அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் என்று மோடி கும்பல் வாய்ச்சவடால் அடிக்கிறது. அது உண்மையல்ல. ஆனால், உலக வர்த்தகக் கழகம் மற்றும் அமெரிக்காவின் லாஜிஸ்டிக் (பொருள் வர்த்தகம் மற்றும் பொருட்கள் கையாளுகை) கம்பெனி முதலாளிகளின் ஆணைகளை ஏற்று வரிவிதிக்கும் அதிகாரத்தை பன்னாட்டு, உள்நாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைத்துவிட்டது.

ஜி.எஸ்.டி. - வரிச் சட்டத்தால் பயனடைவோர் யார்?  
      
நாட்டின் ஒட்டுமொத்த வரிவருவாயில் 65 சதவீதம் மறைமுக வரிகள் மூலம் மக்களிடமிருந்து கசக்கிப்பிழியப்பட்டது. இனி அது மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது. இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை - இனி ஜி.எஸ்.டி. கவுன்சில்  - மூலம் கார்ப்பரேட்டு வல்லுனர்களால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படும். ஏற்கனவே புதிய கார்ப்பரேட்மய தாராளக் கொள்கைகளால் பொருட்களின் விலைகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை கார்ப்பரேட் சந்தை சக்திகளிடம் ஒப்படைத்து விட்டனர். தற்போது வரிவிதிக்கும் அதிகாரத்தையும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டனர். இவ்வாறு இறக்குமதிப் பொருட்களுக்கான தடைகளை அகற்றுவது, வரிகளைக் குறைப்பதுடன் மாநிலங்களின் சுங்க எல்லைகள் தகர்க்கப்பட்டு தங்குதடை எதுவுமின்றி இந்தியச் சந்தை முழுவதையும் அமெரிக்காவின் லாஜிஸ்டிக் கம்பெனிகளுக்கும், அம்பானி, அடானி போன்ற உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கும் திறந்துவிடுகிறது.

ஆன்-லைன் வர்த்தகத்தில் உலகின் நம்பர் ஒன் நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் மற்றும் பிளிப்கார்ட், ஸ்நேப் டீல் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும்; மக்கள் அதிகம் பயன்படுத்தும் நுகர் பொருட்களின் உற்பத்தியில் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் பகாசுர நிறுவனங்களான யூனிலிவர், கோல்கேட், கிளைக்கோஸ்மித்லைன், கொக்ககோலா, நெஸ்லே மற்றும் ரெக்கிட்பென்ஸ்கியர் போன்ற நிறுவனங்களும்; உலகுதழுவிய அளவில் நகர்ப்புற போக்குவரத்து சேவையில் கொடிகட்டிப் பறக்கும் ஊபர் நிறுவனம்; உலகுதழுவிய அளவில் வேளாண்மைத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் மான்சான்டோ நிறுவனம்; ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனியும், போர்டு, டைம்லர், மைக்ரோசாஃட் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பைடு (ஙிணீவீபீu) என்ற சீன நிறுவனமும் மோட்டார்வாகனப் போக்குவரத்துத் துறையில் ஒரு “ஆண்டிராய்ட் செயலியை” உருவாக்கி அத்துறையில் தங்களது கட்டுப்பாட்டைக் கொண்டு வருகிறது. எனவே ஜி.எஸ்.டி. வரி என்பது சில்லரை வர்த்தகம் முதல் கல்வி மருத்துவம் வரை அனைத்து சேவைகள் மற்றும் வர்த்தகத்தை பன்னாட்டுப் பகாசுர கார்ப்பரேட்டுக்களிடம் ஒப்படைப்பதாகும். அத்துடன் முதலாளித்துவ நெருக்கடியின் விளைவாக திவாலாகிவரும் அரசாங்கத்தின் கஜானாவை நிரப்ப சிறு, குறு தொழில்முனைவோர், தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் பரந்துபட்ட மக்கள் மீது கொடிய வரிகளைச் சுமத்துவதற்காக கொண்டு வரப்பட்டதுதான் ஜி.எஸ்.டி வரி சட்டம்.

ஜி.எஸ்.டி-யால் பாதிக்கப்படுவோர் யார்?

ஜி.எஸ்.டி வரியால் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், தேசிய மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாரம்பரிய தொழில்களான ஜவுளி, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, விசைத்தறி, தீப்பெட்டி, பட்டாசு, பீடி, முந்திரி மற்றும் தோட்டப்பயிர் போன்ற தொழில்கள் மீது 18 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. உப்பு மீது 28 சதவீதம் வரியை விதித்துள்ளது. மேலும் கடலைமிட்டாய் முதல் மாவரைக்கும் கிரைண்டர் மெஷின் வரை சிறு, குறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏற்கனவே பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் முடங்கிப்போன தேசிய மற்றும் சிறு, குறு தொழில்கள் அழிவை நோக்கித் தள்ளப்பட்டுள்ளன. அத்துடன் ஆன்லைன் வர்த்தகமும் சேர்ந்து கொண்டு 4 கோடி வணிகர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறது.

ஜி.எஸ்.டி சட்டம் அமல்படுத்துவதற்கு முன்பு ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள்தான் கலால் வரி வரம்பிற்குள் (உற்பத்தி வரி) கொண்டுவரப்பட்டது. இனி அந்த வரம்பு வெறும் ரூ.20 லட்சமாக மாற்றப்பட்டு விட்டது. மேலும் வரியை கட்டுவதற்கான கணினி முறைகளுக்கு இந்நிறுவனங்கள் மாறவேண்டும். வருடத்திற்கு 37 முறை வருமான வரி கணக்குகளை இவர்கள் தாக்கல் செய்யவேண்டும். அதற்கான ஊழியரை நியமித்துக் கொள்ள வேண்டும். இதனால் தமிழகத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட 1.62 லட்சம் தொழில்களும் மற்றும் பதிவுசெய்யப்படாத பல லட்சம் சிறு, குறு தொழில்களும் கடுமையாகப் பாதிக்கின்றன. அவை அழிவை நோக்கி தள்ளப்படுகின்றன.

இந்நிலையில் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படுவதால் கோடிக் கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிபோகும் அபாயம் உருவாகி உள்ளது. அத்துடன் ஜி.எஸ்.டி-யால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து உண்மையான ஊதியம் குறைக்கப்பட்டு தொழிலாளர்களின் வாழ்நிலை அதலபாதாளத்தில் தள்ளப்படும். அவர்கள் கூடுதல் நேரம் உழைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். எட்டுமணி நேர வேலை கனவாக மாறும். ஏற்கனவே மோடி அரசாங்கம் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளையெல்லாம் பறித்து அவர்களை கொத்தடிமைகளாய் மாற்றி வருகிறது.

ஜி.எஸ்.டி மூலம் உரம், பூச்சிமருந்துகள் மீது 18-சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால் இடுபொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. அதேசமயம் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் வேளாண் விளைபொருட்களுக்கு வரி குறைக்கப்படும். அந்நிய நாட்டு வேளாண் விளைபொருட்கள் இந்திய சந்தையில் கொட்டி குவிக்கப்படும். அதனால் வேளாண் விளைவிளைபொருட்களின் விலை வீழ்ச்சியடையும். இந்திய விவசாயிகள் போட்டி போடமுடியாமல் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை தீவிரமடையும். ஏற்கனவே உலக வர்த்தகக் கழகத்துடனான உடன்படிக்கை காரணமாக விவசாயிகளிடமிருந்து ஆதார விலையின் அடிப்படையில் தானியங்களை கொள்முதல் செய்வதை இந்திய அரசு குறைத்துக் கொண்டது. நியாய விலைக்கடைகளை மூடவும் மோடி கும்பல் துவங்கிவிட்டது. ஏற்கனவே விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் மூன்று லட்சம் பேர் தற்கொலை செய்து மாண்டு வரும் நிலையில் ஜி.எஸ்.டி சட்டம் விவசாயிகளுக்கு மற்றொரு தூக்குக் கயிறுதான்.

மக்களை வதைக்கும் கொடிய வரி

ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அதியாவசியப் பொருட்களின் விலை குறையும் என்று மோடி கும்பல் கூறியது. ஆனால், ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 509-பொருட்களுக்கு புதிதாக வரிவிதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் விற்கப்படும் இட்லி தோசைகளின் விலை உயர்ந்துவிட்டது. ஒரு வேளை சாப்பாட்டிற்கு 10 ரூபாய் ஜி.எஸ்.டி வரி ஏறிவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.32 அதிகரித்துள்ளது. ஆனால் சொகுசு கார்கள் முதல் பீட்சா, பர்கர் வரையில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்களுக்கு 6-சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளன.

உயிர்காக்கும் மருந்துகளுக்கு 9-முதல் 18-சதவிகிதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதோடு குடி தண்ணீர் விலை கேன் ஒன்றுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. மாணவர்கள் பயன்படுத்தும் நோட்டுப்புத்தகங்கள், பெண்கள் உபயோகிக்கும் நாப்கின்கள் ஆகியவற்றின் விலை உயர்ந்து விட்டது. அத்துடன் பெட்ரோல், டீசல், மின்சாரம், சாராயம் போன்ற பொருட்களை ஜி.எஸ்.டி-யில் கொண்டுவராமல் 50 முதல் 250 சதவிகிதம் வரையிலான அதீத வரிவிதிப்பு தொடர்கிறது. இவ்வாறு மக்கள் மீது கொடிய வரிச்சுமைகளை மோடி கும்பல் சுமத்தியுள்ளது.

ஜி.எஸ்.டி சட்டத்தை எதிர்ப்பதில் எந்த ஒரு நாடாளுமன்றவாதக் கட்சிகளுக்கும் உறுதியான நிலை இல்லை. காங்கிரஸ் திமுக அணியும் அல்லது பாஜக தலைமையிலான அணியும் ஆட்சியிலிருக்கும் போது இச்சட்டத்தை அமல்படுத்த முயற்சி செய்வதும் எதிர்கட்சியாக மாறும்போதுடு எதிர்ப்பது போலவும் நடிக்கின்றன. ஜி.எஸ்.டி-யை எதிர்ப்பதாகக் கூறும் மார்க்சிஸ்ட் கட்சியும் கூட ஜி.எஸ்,டி-யை கொண்டுவர ஆதரவு கொடுத்தக் கட்சிதான். தமிழகத்தை ஆளும் எடப்பாடி ஆட்சி சசிகலாவின் பினாமியாகத் துவங்கி மோடியின் எடுபிடி ஆட்சியாக மாறிவிட்டது. அது ஜி.எஸ்.டி சட்டத்தை ஆதரிப்பதோடு மோடி அரசை எதிர்ப்போர் மீது எஸ்மா சட்டத்தையும், குண்டர்கள் தடைச் சட்டத்தையும் ஏவி ஒடுக்குகிற ஒரு கங்காணி ஆட்சியாக திகழ்கிறது. இக்கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தை கணக்கில் கொண்டுதான் ஜி.எஸ்.டி-க்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்துப் போராடுவோம்

தொகுத்துக் கூறினால், இந்துத்துவப் பாசிச மோடி கும்பல் அமல்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி. சட்டம், மாநிலத்தின் வரிவிதிப்பு அதிகாரத்தைப் பறித்து அதன் வரி வருவாயை சூறையாடி, கஜானாவை காலியாக்கி, தேசிய இனங்களை ஓட்டாண்டியாக்குகிறது. நாட்டின் சிறு, குறு தொழில்களையும் வர்த்தகத்தையும் அழித்து கொடிய வரிவிதிப்பின் மூலம் பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டமாகும். மோடி கும்பலின் மேக் இன் இந்தியா திட்டமும் ஜி.எஸ்.டி சட்டமும் விவசாயிகளை மட்டுமல்ல இந்தியாவையே “சூசைட் இந்தியாவாக்கி” சுடுகாடாக்கும் திட்டமாகும். அன்று காலனிய ஆட்சி வைஸ்ராய்களின் மூலம் வரிவசூல் செய்து கொள்ளையடித்தது. இன்று வைஸ்ராய் இடத்தில் பிரதமர் அமர்ந்து கொண்டு வரிவசூல் செய்து அமெரிக்காவுக்குக் கப்பம் கட்டும் அரசாக - புதிய காலனி அரசாக - இந்தியாவை மாற்றிவருகிறார். எனவே மீண்டும் ஒரு முழு சுதந்திரப் போர் நடத்தி ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவுவது ஒன்றுதான் இதற்கு உண்மையான தீர்வாகும்

அதற்குத் தயாராகும் அதே வேளையில், உடனடியாக ஜி.எஸ்.டி சட்டத்தை எதிர்த்துப் போராடுவது அவசியமாகும். இன்று விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர் தனித்தனியாக போராடி வருகின்றனர். இவ்வாறு தனித்தனியாக போராடினால் நம்மால் வெற்றி பெறமுடியாது. எனவே ஜி.எஸ்.டி வரியை எதிர்த்து மேற்கண்ட அனைத்து வர்க்கங்களும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் ஒரு முன்னணியை உருவாக்கிப் போராட அறைகூவி அழைக்கிறோம்.

இந்துத்துவ பாசிச மோடி அரசே!
 
* பன்னாட்டு உள்நாடு கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் ஜி.எஸ்.டி வரியை திரும்பப் பெறு!
 
* உலக வர்த்தகக் கழகத்தை விட்டு வெளியேறு!
 
*விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், சிறு குறு தொழில் முனைவோரின் வாழ்வாதாரத்தை பறிக்கும் ஜி.எஸ்.டி-யை எதிர்த்துபோராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
 
ஆகஸ்ட்-2017

No comments:

Post a Comment