Monday 8 September 2014

கச்சத் தீவை மீட்கும் கழகப் போர்!



முன்னுரை

கச்சத்தீவில் பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையில் கொடூரமாக தாக்கப்படுவது தொடர்கிறது. மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகும் கூட இத்தகைய தாக்குதல்கள் தொடர்கின்றன. கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற 15 நிகழ்வுகளில் தமிழகத்தைச் சார்ந்த 319 மீனவர்கள் அவர்களது 62 படகுகள் இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டனர். மோடி கேட்டுக்கொண்டதன் பேரால் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் மீனவர்களின் படகுகள் இன்னமும் விடிவிக்கப்படவில்லை. கடந்த இரு தினங்களில் மீண்டும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று கூறிய மோடி கும்பல் இன்று தமிழக மீனவர்களின் முதுகில் குத்துகிறது.

எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல தமிழக மீனவர்களுக்கு எதிராக பா.ஜ.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி “நான்தான் கடைசியாக இலங்கை சென்றிருந்தபோது அந்நாட்டு அரசிடம் எல்லைத்தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களின் படகுகளை பிடித்து வைத்துக்கொள்ளுங்கள், மீனவர்களை விட்டுவிடுங்கள் என ஆலோசனை வழங்கினேன். அதைத்தான் அவர்கள் இப்போது செய்துகொண்டிருக்கிறார்கள்” என்று தந்தி மீடியாவில் பேட்டி கொடுத்து தமிழக மக்கள் மற்றும் மீனவர்களுக்கு எதிராக பேசியுள்ளார்.

சுப்பிரமணியசாமியின் இந்தப் பேச்சு ஏதோ தனித்த ஒன்றாக பார்க்க முடியாது. இந்துத்துவ பாசிச மோடி ஆட்சியின் இலங்கை சம்பந்தமாக மேற்கொண்டுள்ள கொள்கைகளின் தொடர்ச்சியாகவே பார்க்கவேண்டும். சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரஸ் ஆட்சியைப் போலவே இலங்கை அரசுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமில்லை, கச்சத்தீவுப் புகுதியில் மீனவர்களுக்கு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் உரிமையும் இல்லை, தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என்று நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. எனவே கச்சத்தீவுப் பிரச்சினையில் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சியின் கொள்கைகளையே சுப்பிரமணியசாமி வெளிப்படுத்தியுள்ளார்.
சுப்பிரமணிய சாமி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக இருந்துக்கொண்டு இந்திய மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் செய்துவரும் துரோகங்கள் ஏராளம். பார்ப்பனிய உயர் ஆதிக்க வெறியிலிருந்து செயல்படும் ஒரு ஐந்தாம் படை என்பதையும் நாடறியும். இலங்கை பிரச்சினையில் மோடி ஆட்சியின் ஒரு ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார் என்பதும் வெளிப்படையானதுதான். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் இந்த ஏகாதிபத்திய எடுபிடி, அரசியல் தரகன் செல்வாக்கு செலுத்தி தமிழர்களுக்கு செய்துவரும் துரோகமோ ஏராளம். இத்தகைய ஒரு ஏகாதிபத்திய எடுபிடியை தமிழக மண்ணில் அனுமதிக்கக் கூடாது என்பது மட்டுமல்ல காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுக் கட்சிகளையும் தனிமைப் படுத்தி இந்திய விரிவாதிக்கத்திற்கு எதிராகப் போராடி கச்சத் தீவை மீட்பது ஒன்றுதான் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகும். அந்த நோக்கத்தில்தான் இப்புத்தகம் வெளியிடப்படுகிறது.

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்                                                                                செப்டம்பர், 2014

No comments:

Post a Comment