Tuesday 17 March 2009

ஈழத்தமிழரின் தேசிய இன விடுதலை யுத்தத்தை ஆதரிப்போம்! 1992

ஈழத்தமிழரின் தேசிய இன விடுதலை யுத்தத்தை ஆதரிப்போம்!

அன்பார்ந்த தமிழக மக்களே! ஜனநாயகம் விரும்பும் சான்றோரே!!

இலங்கையில் ஜூன் 11ம் தேதியிலிருந்து மீண்டும் ஒரு உள்நாட்டு யுத்தம் துவங்கிவிட்டது. இப்போர் இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையில் நடைபெற்று வருகிறது. விடுதலைப்புலிகளின் அகம்பாவம், அடாத செயல்களால் இப்போர் நடைபெறுவதாக இங்கே ஆளும்வர்க்க அரசியல் கடசிகளால் பேசப்படுகிறது.
இப்போர் மூளுவதற்கான காரணம் என்ன? இந்திய ஆக்கிரமிப்பு படையை இலங்கையை விட்டு வெளியேற்றுவது என்ற கோரிக்கையின் மீது இலங்கை அரசுக்கும் புலிகள் அமைப்பிற்கும் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி பொம்மை வடகிழக்கு மாகாண கவுன்சிலை கலைத்துவிடுவது, அதற்குத் தேர்தல் நடத்துவது, பிரிந்து செல்லும் உரிமை கோருவதை தேச விரோதம் என்று கூறும் அரசியல் சட்ட 6-வது திருத்தத்தை ரத்துச் செய்வது, வடக்கு கிழக்கு மாகாணத்தில் சிங்களர் குடியேற்றத்தை கைவிடுவது ஆகிய கோரிக்கைகளை இலங்கை அரசு நடைமுறைப் படுத்துவதாக ஒப்புக்கொண்டது. இலங்கை அரசு அவற்றை நடைமுறைப்படுத்தியதா? இல்லை. ஒப்பந்தத்திற்கு மாறாக, பொம்மை வடகிழக்கு மாகாண கவுன்சிலை எப்படியாவது நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் பிற அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. தேர்தல் நடத்துவதாக வாக்குறுதி கொடுத்த இலங்கை அரசு, புலிகள் அமைப்பு ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் தேர்தல் நடத்துவதாக இப்போது கூறுகிறது. இவ்வாறு அரசு கொடுத்த வாக்குறுதிகளை இப்போதுதான் முதன்முறையாக மீறுகிறதா? இல்லை. அதன் வாடிக்கையான பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் இப்போது விடுதலைப் புலிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறுவதும்கூட, இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி உருவான மாகாண கவுன்சிலுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கவுமில்லை, அந்த பொம்மைக் கவுன்சிலைகூட செயல்பட அனுமதிக்கவில்லை. இது ஒன்றே போதும் இலங்கை அரசின் யோக்கியதாம்சத்தைப் புரிந்து கொள்வதற்கு. ஏன் போர் மூண்டது? போர் நிறுத்த ஒப்பந்தப்படி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள இலங்கை இராணுவம் புலிகளின் அனுமதிபெற்றுத்தான் வெளியில் வரவேண்டும். ஆனால் ஒப்பந்தத்திற்கு மாறாக, இலங்கை இராணுவம் முகாமைவிட்டு வெளியே வந்தது. புலிகளின் எச்சரிக்கையை அது அலட்சியப் படுத்தியது. துப்பாக்கிச் சூட்டை நடத்தியது. இது ஏதோ ஓர் தனிச் சம்பவம் அல்ல. சிங்களத் தீவிரவாத அமைப்பான ஜெ.வி.பி.யை நசுக்கி விட்டதைப்போல் விடுதலைப் புலிகளையும் அழித்து விடலாம் என்று எண்ணி இலங்கை அரசு யுத்தத்திற்கான ஏற்பாடுகளை துவங்கியது. வடகிழக்கு மாநிலத்தில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்தது. இலங்கை அரசு போருக்கான ஆயத்தங்களை செய்யத் துவங்குவது தெரிந்தவுடன் விடுதலைப் புலிகள் எச்சரிக்கையாயினர். எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து விடுதலை புலிகள் எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. கிழக்கு மாகாணத்தில் இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் பெரும்போர்மூண்டது.
இது ஒரு தேசிய இன ஒடுக்குமுறை யுத்தமே விடுதலை புலிகளைத் தேடி அழிப்பது என்ற பெயரில் ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு இலங்கை அரசு ஒரு இனவெறி பாசிச யுத்தத்தை ஈழமக்கள்மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. சர்வதேச விதிகளையும் போர் ஒழுக்க நெறிகளையும் மீறி இலங்கை இராணுவம் விமானத்திலிருந்து தீக்குண்டுகளை வீசுகிறது. எந்திரத் துப்பாக்கிகள் மூலம் சூட்டுத் தள்ளுகிறது. முதியவர், பெண்டிர், குழந்தைகள் என்று வித்தியாசம் பாராமல் ஏராளமான மக்களைக் கொன்று குவிக்கிறது. சுமார் எட்டு லட்சம் மக்கள் வீடுகள் இழந்து அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். மக்களின் உடமைகள் நாசமாக்கப்பட்டன. எந்த நேரத்தில் மரணம் நேருமோ என மக்கள் அஞ்சி வாழ்கின்றனர். மக்களின் சமூக வாழ்வு இராணுவ பயங்கர நடவடிக்கைகளால் சின்னாபின்னமாக்கப் பட்டிருக்கிறது. புலிகளைச் சுற்றி வளைத்து நசுக்கும் யுத்தத்தை அது நடத்துகிறது. 'இனிப்போர் நிறுத்தம் இல்லை. புலிகளை ஒடுக்கும் வரை ஓயமாட்டோம்' என இராணுவ அமைச்சர் முழங்குகிறார். மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பாகிஸ்தானிடமும், இஸ்ரேலிடமும் இராணுவ உதவி கேட்டுள்ளார். பிரேமதாசா, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் வியட்நாம் மக்களுக்குச் செய்த போர்க் கொடுமைகளுக்கு இணையாக இலங்கை அரசு தனது சொந்த நாட்டு மக்களுக்கு கொடுமை இழைக்கிறது. ஈழத்தமிழரின் விடுதலை இயக்கத்தை நசுக்குவதற்கான ஒரு தேசிய ஒடுக்குமுறைப் போராகவே இப்போர் இருக்கிறது.
விடுதலை புலிகளின் நீதி யுத்தம், ஒரு நீண்ட யுத்தமே இலங்கை அரசின் தேசிய ஒடுக்குமுறை யுத்தத்தை எதிர்த்துப் போராடி விடுதலை பெற்று ஒரு சுதந்திரமான தேசமாக வாழ்வதா? அல்லது பணிந்து அடிமைப்பட்டு அவதியுற்றுக் கிடப்பதா? என்பதுதான் இன்று ஈழத் தமிழ் மக்கள் முன்னுள்ள பிரச்சினை. விடுதலை புலிகள் அமைப்பு இலங்கை அரசின் தேசிய ஒடுக்குமுறை யுத்தத்தை எதிர்த்து ஒரு தேசிய விடுதலை யுத்தத்தை மேற்கொண்டிருக்கிறது. புலிகளை அழித்துவிட்டு சில நாட்களுக்குள் ஈழத்தமிழ் நிலத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விடுவோம் என இலங்கை அரசு கூறுகிறது. கிழக்கு மாகாணத்தில் சில நகரங்களை இலங்கை இராணுவம் கைப்பற்றியிருந்தாலும், புலிகளின் முற்றுகையை உடைத்துவிட்டு யாழ் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டு விட்டாலும், ஏன் யாழ் தீபகற்பத்தையே இப்போது தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் வெற்றிபெற்று விடுமானாலும்கூட, கிராமங்களும், காடுகளும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். இலங்கை அரசு ஏகாதிபத்திய வாதிகளிடமிருந்தும், அயல் நாட்டு பிற்போக்கு அரசுகளிடமிருந்தும் எவ்வளவுதான் இராணுவ உதவி பெற்று வலுக் கொண்டு தாக்கினாலும், விடுதலைப்புலிகளையும், ஈழத்தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தையும் அதனால் எளிதில் அடக்கிவிட முடியாது. ஏனெனில் விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு நீண்டகால யுத்தத்திற்கு தயாராகி உள்ளது. கிராமங்களிலும், காடுகளிலும் பதுங்கி, மக்களையே தனது அரணாகக் கொண்டு போரிடுமானால், ஒரு நீணடகாலத்திற்கு போராடுவது சாத்தியம். இந்திய ஆக்கிரமிப்புப்படையை எதிர்த்து விடுதலை புலிகள் அமைப்பு நடத்திய யுத்தத்தை ஒரு அனுபவமாகக் கொண்டு பார்ப்போமானால் விடுதலைப் புலிகளால் ஒரு நீண்டகால யுத்தத்தை நடத்துவது சாத்தியமானதுதான் என்ற முடிவிற்கு ஒரு நியாயபுத்தி உடைய எவரும் வரலாம். எனவே புலிகளை எதிர்த்து இலங்கை இராணுவம் நடத்தும் யுத்தம் ஐந்து பாண்டவரை ஒழிக்க நூறு கௌரவர்கள் நடத்திய பாரதப் போர் கதையைப் போன்றுதான் இருக்கும்.
ஈழத்தனிநாட்டிற்கான போரும் ஜனநாயக வாதிகளின் நிலைபாடும் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் 1983ல் ஒரு தேசிய விடுதலை யுத்தம் என்ற வடிவம் எடுத்ததிலிருந்து, அது பல்வேறு கட்டங்களைக் கடந்து, இன்று இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான ஓர் உள்நாட்டு யுத்தம் என்ற வடிவத்தை எடுத்திருக்கிறது. இந்தப் போர் ஏதோ இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தனிப்பட்ட நலன்களுக்காக நடத்தப்படும் ஒரு போரைப் போலவும், இந்தப் போர் ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவதற்குத் தொடர்பு இல்லாததைப் போலவும் ஆளும் வர்க்கங்கள் இப்போரைச் சித்தரிக்கின்றன. இப்போரில் பிற அமைப்புகள் பங்கு கொள்ளவில்லை. புலிகள் அமைப்பு மட்டுமே தனியாக நடத்துகிறது என்றும், அவை கூறுகின்றன. இப்போரில் இலங்கை அரசை எதிர்த்து புலிகள் அமைப்பு தனித்துப் போரிடுகிறது என்பது உண்மையே. இவ்வாறு அது தனித்து நின்று போரிடுவது இந்த தேசிய விடுதலை யுத்தத்தின் பலமும், பலவீனமும் ஆகும்.
விடுதலை புலிகள் அமைப்பு தனித்து நின்று போரிடும் நிலை ஏன் ஏற்பட்டது? அதற்கான காரணங்கள் என்ன? இந்திய 'அமைதிகாக்கும் படை'யை எதிர்த்து யுத்தம் நடந்த போதே ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, பிளாட் ஆகிய அமைப்புகள் இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் சேர்ந்து கொண்டன. இவ்வமைப்புகள் இந்திய படையுடன் சேர்ந்து விடுதலை புலிகள் அமைப்பை அழிக்கவும், ஈழத்தமிழ் தேசிய இன விடுதலை இயக்கத்தை நசுக்கவும் முயன்றன. ஆகையால், இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்துப் போர் நடந்தபோதே தனித்து நின்று போராட வேண்டியதாயிற்று. இன்றைய உள்நாட்டு யுத்தத்தில் இவ்வமைப்புகளில் ஈ.பி.ஆர்.எல்.எப் - நீங்கலாக பிற அமைப்புகள் பிரேமதாச அரசுடன் நேரடியாக சேர்ந்துக்கொண்டு ஈழ தேசிய விடுதலைக்கு எதிராகச் செயல்பட்டன. ஈ.பி.ஆர்.எல்.எப்-பின் கொள்கைகள் புலிகளை ஒடுக்குவதற்கு மறைமுகமாக சேவை செய்கின்றன. இவ்வாறு இப்போரில சில அமைப்புகள் நேரடியாகவும், ஈ.பி.ஆர்.எல்.எப் மறைமுகமாகவும் பிரேமதாசா அரசுக்குத் துணைபோவதால் இவ்வமைப்புகள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு சிதறுண்டு போயின. எனவே இன்றைய யுத்தத்தில் விடுதலை புலிகள் அமைப்பு தனித்து நின்று போரிட வேண்டியுள்ளது. இவ்வமைப்புகளிடமிருந்து வேறுபட்டும், அவற்றை எதிர்த்தும், அது தனித்து நின்று போரிடுவது ஈழத் தமிழின விடுதலை யுத்தத்திற்கு பாதகமானது அல்ல. சாதகமானதும்கூட. விடுதலைப்புலிகள் அமைப்பு தனித்து நின்று போரிடுவதற்கு மற்றொரு காரணம் உண்டு. அதைப் பின்னர் எடுத்துக் கொள்வோம். இப்போது நடைபெறும் யுத்தத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு இரு தரப்பினரையும் எதிர்த்துப் பேசுகிறது. தான் நடுநிலை வகிப்பதாகக் கூறிக்கொள்கிறது. இவ்வமைப்பு முன்வைத்துள்ள பத்தொன்பது கோரிகைகளை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதற்குப் பிறகு சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் இவ்வமைப்பு கூறுகிறது. இவ்வாறு தேசிய சுயநிர்ணய உரிமையை ஒரு பேரப் பொருளாக மாற்றுகிறது. போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இராணுவ வழியில் ஈழப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடியாதென்றும், அரசியல் வழியில் தான் தீர்வுகாண முடியுமென்றும் அது கூறுகிறது. அவ்வமைப்புக் கூறும் அரசியில் தீர்வின் உண்மையான பொருள் சுயநிர்ணய உரிமையை கைவிட்டு, வடகிழக்கு மாநில கவுசிலுக்கு அதிக அதிகாரத்துடன் திருப்திக் கொள்ள வேண்டும் என்பதுதான், பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையில்லாமல், மாநில கவுன்சிலுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டாலும் இலங்கை அரசமைப்பிற்குள் ஈழத்தமிழ் தேசிய இனம் இன ஒடுக்கு முறையிலிருந்து விடுதலைப் பெற முடியாது. ஆனால் இரு தேசிய இனஙகளும் இலங்கை அரசுக்குள் சேர்ந்து வாழ முடியாது என்பதை இப்போது இலங்கை அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் இன ஒடுக்குமுறை யுத்தம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது. வரதராஜப் பெருமாள் தலைமையில் அமைந்த மாநிலக் கவுன்சிலை கூட இலங்கை அரசு செயற்பட அனுமதிக்கவில்லை. இவ்வமைப்புக்கூட பத்தொன்பது கோரிக்கைகளை ஓராண்டிற்குள் ஏற்கப்படாவிட்டால் தனிநாடு எனப்பிரகடனப்படுத்தப் போவதாக அறிவித்தது. இந்த அனுபவத்திற்குப் பிறகும்கூட "மாநிலக் கவுன்சிலுக்கு அதிக அதிகாரம்" என்ற கேடுகெட்ட சீர்திருத்த முறையிலான தீர்வைத்தான் திரும்பத் திருமபக் கூறுகிறது. "அதிக அதிகாரம்", "அரசியல் தீர்வு", "போர் நிறுத்தம்" என்பதெல்லாம் தேசிய விடுதலை யுத்தத்திலிருந்து மக்களை சீர்திருத்தப்பாதைக்கு திசை திருப்புவதுதான். விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுதங்களைத் தேசிய ஒடுக்குமுறையாளர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற பழைய பல்லவியைப் பாடுவதத் தவிர இது வேறு ஒன்றுமில்லை. இலங்கை - இந்திய அரசுகள் மற்றும் ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கே இது பயன்படும். ஆகவே இப்போக்கு நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றே தவிர ஏற்க வேண்டியதல்ல. விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்து நின்று போரிடுவதற்கு மற்றொரு காரணம் உண்டு என்று முன்பே குறிப்பிட்டோம். அவ்வமைப்பின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்கும், ஒரு படையின் ஆட்சி அல்லது அனைத்து அதிகாரங்களையும் தனது ஏகபோகமாக்கிக் கொள்வது என்ற அதன் பாசிசக் கொள்கையே அந்த இரண்டாவது காரணமாகும். இக்காரணத்தால் பாசிசப் பிரேமதாசா அரசின் தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்க்கும் அனைத்து தேசிய விடுதலை ஆதரவு சக்திகளையும், அவ்வரசின் பாசிச ஒடுக்குமுறையால் ஒடுக்கப்படும் இலங்கை வாழ் ஜனநாயக சக்திகளையும் தேசிய இன விடுதலைப் போருக்கு ஆதரவாகத் திரட்ட இயலாது. தேசிய விடுதலைப் போரில் ஊன்றி நிற்பதற்கு தடையாகி, போராளிகள் சமரசப்போக்கிறகு இரையாகி பணிந்து போவதற்கான நிலைமைகளை உருவாக்கக் கூடியதாகவும் இருகிறது. எனவே விடுதலைப் புலிகளின் இப்போக்கை எதிர்த்துப் போரிடாமல் ஈழத்தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் வெற்றி கொள்ள முடியாது. சுருங்கக்கூறின் விடுதலைப்புலிகள் அமைப்பு ஈழத்தமிழின தேசிய விடுதலைக்காக விடாப்பிடியாகப் போராடுகிறது. அதே நேரத்தில் அது ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகார முறைகளைக் கடைப்பிடிக்கிறது. விடுதலை புலிகள் அமைப்பின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்கின் காரணமாக, பாட்டாளி வர்க்க இயக்கத்தினரும், ஜனநாயக சக்திகளும் இன்றைய ஈழத்தமிழ் தேசிய இன விடுதலைப் போரில் புலிகள் அமைப்பின்பால் என்ன அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் பிரச்சினை. ஈழத்தமிழ் தேசிய இனப்போராட்டத்தில் இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, ஈழத்தமிழ் தேசிய இனத்தின் அரசியல் முன்னேற்றம் - ஜனநாயகம் மற்றொன்று தேசிய இன விடுதலை யுத்தத்தில் விடாப்பிடியாக இருப்பது. இவை இரண்டும் பிரிக்க முடியாதவை. அரசியல் முன்னேற்றம்-ஜனநாயகம் எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதிகமாக விடுதலைப் புரட்சி சக்திகள் யுத்தத்தில் விடாப்பிடியாக இருக்க முடியும். யுத்தத்தில் எந்த அளவிற்கு விடாப்பிடியாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அரசியல் முன்னேற்றம் - ஜனநாயகத்தின் முன்னேற்றம் அதிகமாக இருக்கும். ஆனால், அடிப்படை எல்லாமே விடுதலைப் புரட்சி சக்திகள் யுத்தத்தில் விடாப்பிடியாக தங்கியிருப்பதில்தான் உள்ளது. எனவே விடுதலை புலிகள் அமைப்பு தேசிய விடுதலை யுத்ததில் விடாப்பிடியாக இருக்கும் வரையில், தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டத்தில் அவர்களுடன் ஒற்றுமையும், அவர்களின் ஜனநாயக மற்றும் எதேச்சதிகாரப் போக்குகளை எதிர்த்த போராட்டமும்தான் ஈழத்தமிழ் பாட்டாளி வர்க்க இயக்கத்தினர் மற்றும் ஜனநாயகவாதிகளின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். தேசிய இன ஒடுக்குமுறைப் போராட்டத்தில் ஒரு குறிப்பான திட்டத்தின் அடிப்படையில் ஓர் ஐக்கிய முன்னணியைக் கட்டுவதை அனைத்து ஜனநாயகவாதிகளும் தமது செயல்தந்திரமாக கொள்ள முடியும்.
ஈழவிடுதலைப் போரும், நமது பணிகளும் இந்திய அரசு, 1983லிருந்து 1987ல் இந்தியப்படை இலங்கையில் தலையிட்ட காலம் வரையிலான ஈழத்தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்திலிருந்து தற்போது நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தை வேறுபடுத்திப் பார்க்கிறது. முன்கூறப்பட்ட காலப் பகுதியில், இலங்கை அரசை எதிர்த்த தமிழீழ தேசிய இன உரிமைப் போராட்டத்தில் சமரசப் போக்குடைய, பாராளுமன்றவாத டி.யூ.எல்.எப் முதல் எல்.டி.டி.இ வரையிலான பல்வேறு வகைப்பட்ட சக்திகள், அரசியல் சக்திகள் பங்குகொண்டன. ஆனால் இப்போது இலங்கை அரசை எதிர்த்து நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தை எல்.டி.டி.இ (விடுதலைப் புலிகள் அமைப்பு) மட்டுமே தனியாக நடத்துகிறது. அன்று 1983 - 1987 போராட்டத்தின்போது அதில் பங்கு கொண்ட அரசியல் சக்திகள் மற்றும் குழுக்கள் அனைத்தும் தனிநாடு கோரிக்கையை ஆதரித்தவை அல்ல. டி.யூ.எல்.எப் அமைப்பு 1983 ஜூன் கலவரத்திற்கு முன்பே தனிநாடு கோரிக்கையைக் கைவிட்டு விட்டது. எல்.டி.டி.இ (விடுதலைப் புலிகள்) தவிர பிற போராளி அமைப்புகள் தனிநாடு கோரிக்கையை ஆதரிப்பதில் ஊசலாட்டம் அல்லது கைவிடும் நிலையில் இருந்தன. ஆனால் இப்போது எல்.டி.டி.இ மட்டும் தனியாக நின்று யுத்தம் நடத்துகிறது. அதன் குறிக்கோள் தனிநாடு காண்பதுதான். 1983-1987ஆம் ஆண்டுகளின் போராட்ட காலத்தில் அதில் பங்குகொண்ட சக்திகளை சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை கைவிடச்செய்து, தமிழ்ழீழ மாநிலம் அமைப்பதுடன் திருப்திக்கொண்டு' இலங்கைமீது தனது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளச் செய்தது. அதே போல், இப்போது யுத்தத்தை நடத்தும் எல்.டி.டி.இ ஐ - தற்போது ஏற்றுக்கொள்ள வைக்க முடியாது என இந்திய அரசு கருதுகிறது. ஆகையால் 1983 - 1987 காலத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்திற்காக, மறைமுகத் தலையீடு என்ற கருவியை பயன்படுத்தும் பொருட்டு தமிழகத்தைப் போராளிகள் தமது பின்புலமாகப் பயன்படுத்துதல் என்ற கொள்கையை இப்போது நடைபெறும் யுத்தத்தின் இன்றைய கட்டத்தில் பயன்படுத்த முடியாது என இந்திய அரசு கருதுகிறது. எனவே எல்.டி.டி.இ யினர் தமிழகத்தைப் பின்புலமாக பயன்படுத்துவதற்கு அனுமதிக்க மறுக்கிறது. ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு இந்திய அரசு 1987ல் இலங்கைக்கு இந்திய 'அமைதிகாக்கும் படையை' அனுப்பியது. ஆனால் தற்போது நடைபெறும் யுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு படையை அனுப்பும் வாய்ப்பு இப்போது இல்லை என இந்திய அரசு கருதுகிறது. என்றாலும், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இப்போது நடைபெறும் யுத்தம் ஒரு நீண்டகால யுத்தமாகவே இருக்கும். ஒருவரை யொருவர் தோற்கடிக்க முடியாமல் இதே யுத்தம் ஒரு நீண்ட காலத்திற்கு நீடித்தால் இரண்டுவிதமான நிலைமைகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.இந்த யுத்ததில் ஈடுபட்டிருக்கும் இருதரப்பினருமே அன்னிய இராணுவ உதவியை நாடவேண்டிய நிலை ஏற்படலாம். யுத்தத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் பேச்சு வார்த்தைக்கான ஒரு வாய்ப்பு தோன்றலாம்.இவ்விரு வாய்ப்புகளைக் கருதியே இந்திய பிரதமர் வி.பி.சிங் "இந்திய - இலங்கை ஒப்பந்தம்" இன்னும் அங்கே அமலில் இருக்கிறது" என்று சொல்கிறார். "இலங்கையின் உள் விவகாரங்களில் மூன்றாம் நாடுகள் தலையிடுவதை இந்தியா அனுமதிக்காது" என இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் குஜ்ரால் கூறுகிறார். பிணம் தின்னும் கழுகைப் போல், இந்திய அரசு இலங்கையில் நேரடியாகத் தலையிடுவதற்குக் காத்துக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் இந்திய அமைச்சர்களின் பேச்சுகள் காட்டுகிறது. ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையைப் பற்றி இந்திய அரசுக்கும் கவலையில்லை. ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டு இலங்கையில் தலையிட்டு எப்படியாவது அதன்மீது தனது மேலாதிக்கத்தைத் திணிப்பதுத்தான் இந்திய அரசின் நோக்கம். பாகிஸ்தானுடன் யுத்தத்திற்கான வாய்ப்பு இன்னும் நீங்காத நிலைமையில் கடல் கடந்த நடவடிக்கையில் இந்தியப் படையை இப்போது ஈடுபடுத்த முடியாது. ஆகையால் தலையீட்டிற்கான வாய்ப்புக்காக அது காத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய ஒரு சூழ்நிலைமையில்தான் இந்திய அரசு நடுநிலை வகிப்பதுபோல் பாசாங்குச் செய்கிறது. அதேநேரத்தில், இலங்கை அரசுக்கு உதவத் தயார் எனவும் வி.பி.சிங் கூறியிருக்கிறார். தமிழக முதல்வர் கருணாநிதியோ தனது உண்மைச் சொரூபத்தை மூடிமறைத்துக் கொள்வதற்காக ஈழத்தமிழருக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி பந்த் நடத்துகிறார். ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் சேர்ந்து கொண்டு தமிழகத்தில் ஈழத்தமிழ் விடுதலைப் போரில் ஈடுப்படுவோரை நடமாடக் கூட அனுமதிப்பதில்லை. இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களின் அரசியல் கட்சிகளும், திருத்தல் வாதக் கட்சிகளும், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய அனைத்தும் தற்போது நடைபெறும் யுத்தம் ஈழத்தமிழினத்தின் மீது இலங்கை அரசு தொடுத்திருக்கின்ற ஒரு பாசிச இன ஒடுக்குமுறை யுத்தம் என்பதை மூடி மறைக்கும் பொருட்டு, இந்த யுத்தம் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெறும் யுத்தமாக மட்டுமே சித்தரித்துக் காட்டுகின்றன. இந்த யுத்தம் ஈழத்தமிழினத்தை ஒடுக்கும் ஒரு யுத்தம் என்ற உண்மையைச் சொல்ல மறுக்கின்றன. சிவிலியன்கள் - சாமானியர்கள் கொலை செய்யப்படக் கூடாது என குரல் எழுப்பி விடுதலைபுலி அமைப்பினர் கொல்லப்படுவதை நியாயப் படுத்துகின்றனர். இந்திய ஆக்கிரமிப்பு படையை எதிர்த்து விடுதலை புலிகள் போராடி அதை இலங்கையை விட்டு வெளியேறச் செய்ததற்காக, இக்கட்சிகள் இப்போது அவர்களை பழிவாங்க முயல்கின்றன.இந்தப் போரில் ஈழத்தமிழ் தேசிய இனம் வெற்றி பெற்றுவிட்டால், அதைக் கண்டு இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் வீறு கொண்டு எழுந்து போராட்டப் பாதையில் இறங்கிவிடுமோ, ஏற்கெனவே தனிநாடு கோரி போராடும் காஷ்மீர் மக்கள் இறுதிவரை போராடுவோம், என்று உறுதி கொள்வார்களோ என அஞ்சி, இந்திய அரசு ஈழத்தமிழரின் தனிநாட்டிற்கான போராட்டத்தை ஒடுக்குவதற்காக இலங்கை அரசுக்கு ஆதரவளிக்கிறது. தமிழின ஆளும் வர்க்கங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கருணாநிதி, தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைப் பற்றி கவலைப்படாமல் "மாநிலங்களுக்கு அதிக அதிகாரம்" என்ற சில்லரைக் கோரிக்கையுடன் திருப்தி கொண்டுவிட்ட கருணாநிதி, இந்திய அரசின் இலங்கைக் கொள்கைக்கு துணை போவது இயல்பானதே. எனவே மத்திய - மாநில அரசுகளின் சதிச் செயல்களை முறியடித்து, ஈழத் தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போர் வெற்றி பெறச் செய்யும் பொருட்டு.
இந்திய அரசே!
இலங்கை அரசுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்!
ஈழத் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!
தமிழக மக்களே!
ஈழத்தமிழரின் விடுதலைப் போருக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம்!
தமிழகத்தை ஈழத் தமிழின விடுதலைப் போருக்கு பின்புலமாக்குவோம்!
என்ற முழக்கங்களின்பின் அணி திரளுமாறு அறைக்கூவி அழைக்கிறோம்.
செப்டம்பர், 1990.

No comments:

Post a Comment